ஓணம் பண்டிகை..சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 6ல் திறப்பு..உடனடி முன்பதிவுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஓணம் திருநாளில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து தயாராகி வருகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
ஓணம் பண்டிகை..ஹஸ்தம் தொடங்கி திருவோணம் வரை கோலாகலம்..மகாபலி மன்னனை வரவேற்க தயாராகும் கேரளா
ஆவணி மாத பூஜை
சிங்கம் மாத பூஜைக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜைக்குப் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஓணம் திருநாள்
மலையாளிகளின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை வரும் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 8ஆம் தேதி நடைபெறும் திருவோண தின சிறப்பு பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவும் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
திருவோண திருவிழா
ஓணத்தை முன்னிட்டு திறக்கப்படும் சபரிமலை கோயிலானது, வரும் 10ஆம் தேதி அடைக்கப்படும். ஓணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். தற்போது சபரிமலை மேற்கூரையில் தண்ணீர் கசியும் பகுதியில் அதைச் சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பணியை விரைந்து முடிக்கவும் தேவசம்போர்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கன்னி மாத பூஜை
இதேபோல் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.