உலகத் தொலைக்காட்சி தினம்
உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் நாள் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொலைக்காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருளாக கொள்ளப்படுகின்றது.
'தொலைவில் தெரியும் காட்சி" என்று தொலைக்காட்சி பொருள் பட்டாலும்கூட, பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியைக் குறிக்கும் ஒரு பதமாகவே இன்று இது பயன் படுத்தப்படுகின்றது. தொலைக்காட்சி என்பது கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி, ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது;. இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும், கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தரப்படுகின்றது. நேரில் காணமுடியாத சம்பவங்களைக் கூட கண்டுகளித்திட தொலைக்காட்சி உறுதுணையாக விளங்குகின்றது என்பது மறுக்க முடியாததாகும். தொலைக்காட்சி கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
1996ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17, 1996 ல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
மேற்படி கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது.
இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டு பிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். 1926ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 'பில்லோ பான்ஸ்வர்த்' என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் 'விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார்.
இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியைக் அறிமுகம் செய்தவர் என்பதினால் 'ஜோன் லூகி ஃபெர்டு" 'தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று இனங்காட்டப்படுகின்றார். இயந்திரத் தொலைக்காட்சியை மட்டுமல்லாமல் ரேடார் தொழில்நுட்பம்இ 'பைபர் ஆப்டிக்ஸ்" என ஜோன் லூகி ஃபெர்டு இன் பங்களிப்பு முக்கியம் பெறுகின்றன.
ஸ்கொட்லாந்தில் பிறந்து வளர்ந்த 'ஜோன் லூகி ஃபெர்டு"டைய ஆய்வின் அடிப்படை ஸ்கொட்லாந்திலே ஆரம்பமானது. 'இயந்திரங்கள், மோட்டார், மின்சாரம்' போன்றவற்றில் 'ஜோன் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். 'Wireless World', 'Wireless Weekly' போன்ற வாரசஞ்சிகைகளை தொடர்ந்தும் வாசித்து வந்த ஜோன் 'டெலிவிஷன்' என்ற வார்த்தையை 1900ல் பாரீஸ் மின்சார மாநாட்டில் கான்ஸ்டின் பெர்சிகி என்றவர் ஆற்றிய உரையின் சுருக்கத்திலிருந்து கண்டெடுத்தார்.
'தொலைவிலிருந்து பார்ப்பது' எனப் பொருள்படும் 'டெலிவிஷன்' என்ற வார்த்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பலரும் பல அமைப்புகளும் அப்படியொரு இயந்திரத்தை உருவாக்க முனைந்திருந்திருந்தனர். இந்த வகையில் 'பால் நிப்கோ" எனும் ஜெர்மனிய ஆய்வாளரின் ஆய்வுகள் ஜோனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு விம்பத்தை மறு உருவாக்கம் செய்யும் முறையை 'பால் நிப்கோ" கண்டுபிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முழுமையான தொலைக்காட்சியை ஏன் உருவாக்க இயலாது என ஜோன் சிந்தித்து வந்தார். தனக்கிருந்த தொழில் நுட்ப அறிவினைப் பயன்படுத்தி அதற்கான ஆய்வுகளில் முழு மூச்சாய் இறங்கினார். இதனைத் தொடர்ந்தே அவருடைய வாழ்க்கையில் தொழில் முறைச் சிக்கல்கள், பணப் பிரச்சனை, மனவிரக்தி ஆகிய போராட்டங்கள் ஆரம்பமாகின.