Fact Check: ஆளுநர் ரவி சட்டசபையில் 'ஓடியதாக' ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் புகழ்ச்சி? பரவிய வதந்தி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் சட்டசபையில் ஆற்றிய உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தவுடன் ஆர்.என்.ரவி பாதியில் எழுந்து சென்றதை பிரபல தடகள வீரர் உசைன் போல்ட் பாராட்டியதாக பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைபோல் ஒரு படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைதன்மை பற்றி அலசுவோம்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் அண்மையில் கூடிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய வார்த்தைகள், வரிகள், பத்திகளை ஆளுநர் படிக்காமல் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு என்று வரும் ஒரு இடத்தில் அப்படி சொல்லாமல் "திஸ் கவர்மெண்ட்" என்று ஆங்கிலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை அவர் புறக்கணித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
Fact check: கொரோனா நிதியில் துர்கா ஸ்டாலின் ரூ.1 கோடி தங்க புடவை வாங்கியதாக பரவும் தகவல் போலி
தவறவிட்ட பத்தி
அந்த அறிக்கையில் "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது
படிக்காத ஆளுநர்
ஆனால் தமிழ்நாடு அரசு அச்சிட்டு கொடுத்த அந்த பத்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தார். அதேபோல், ஆளுநர் உரையில் "தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது." என்று குறிப்பிட்டு இருந்த வாசகத்தையும் படிக்காமல் விட்டு உள்ளார் ஆளுநர் ரவி.
வெளியேறிய ஆளுநர்
ஆளுநர் ரவி முன்பாகவே இதற்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றினார். தன்னை வைத்துக் கொண்டே தன் பேச்சை சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வந்ததால், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார்.
விவாதப் பொருளான ஆளுநர்
ஆளுநரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு தலைவர்கள், ஊடகங்கள் தொடங்கி தேசிய தலைவர்கள், ஊடகங்கள் வரை பலரும் இது குறித்து பேசி வருகிறார்கள். ஆளுநர் ரவி சட்டசபையிலிருந்து வெளியேறியதை வைத்து பலரும் மீம்களை வெளியிட்டு உள்ளார்கள்.
உசேன் போல்ட் பாராட்டினாரா?
இந்த நிலையில், "ரவியை பார்த்து வியந்த உசைன் போல்ட்" என்ற தலைப்பில்
சன் நியூஸின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்படும் ஒரு நியூஸ் கார்டு போல் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. அதில், "சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்ததாக பிரபல ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருந்தால் தனது சாதனையை ரவி முறியடித்திருப்பார் எனவும் கூறினார்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பலரால் பகிரப்பட்ட படம்
ஒலிம்பிக்கில் பல தங்கப்பதங்களை வென்ற ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஆளுநரை பாராட்டியதாக மீம் போல் நையாண்டி செய்யும் வகையில் போட்டோஷாப் செய்யப்பட்டு உள்ள இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும் பலரும் உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இதை சன் நியூஸின் சமூக வலைதள பக்கத்தில் காண முடியவில்லை.
உண்மை என்ன?
மேலும் இந்த கார்டில் பயன்படுத்தப்பட்டு இருந்த எழுத்து வடிவம் சன் நியூஸ் பயன்படுத்தும் எழுத்து அல்ல. அதேபோல் உசேன் போல்டின் சமூக வலைதள பக்கங்களிலும் இதுபோன்ற பதிவு எதுவும் இல்லை.அவர் பேட்டியளித்ததாகவும் சர்வதேச ஊடகங்களிலும் எந்த செய்தியும் வெளியாகவில்லை. குறிப்பாக ஆளுநர் ரவி வேகமாக எழுந்து சென்றாரே தவிர ஓடவில்லை. எனவே இந்த படம் போலியானது என்ற முடிவுக்கு நாம் வந்து இருக்கிறோம்.
Fact Check
வெளியான செய்தி
சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்ததாக பிரபல ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருந்தால் என் சாதனையை ரவி முறியடித்திருப்பார்
முடிவு
உசேன் போல்ட் இதுபோல் எந்த இடத்திலும் சொல்லவில்லை. தொலைக்காட்சியும் இந்த செய்தியை வெளியிடவில்லை.