ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 'கிரிக்கெட்' சீனிவாசன் சேர்ப்பு
ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன், ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதைத் தொடர்ந்து தீவிரத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.
இந்த நிலையில் புதிய சிக்கலில் மாட்டியுள்ளார் சீனிவாசன். ஜெகன் மோகன் ரெட்டி மீதான ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையில் சீனிவாசன் பெயரைச் சேர்த்துள்ளது சிபிஐ.
இன்று ஹைதராபாத் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்த இந்த புதிய குற்றப்பத்திரிக்கையில் சீனிவாசன் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
சீனிவாசன் நடத்தி வரும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் மற்றும் பென்னா சிமென்ட்ஸ், பாரதி சிமென்ட்ஸ் ஆகியவற்றின் பெயர்கள் இந்த புதிய குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளன.
ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனங்களில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ. 140 கோடி முதலீடு செய்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்தபோது, முதல்வராக இருந்தபோது தண்டூர் மற்றும் நல்கொண்டாவில் உள்ள நிறுவனங்களில் இந்த முதலீடு செய்யப்பட்டதாகவும் சிபிஐ கூறுகிறது.
2011ல் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இதுதொடர்பாக சீனிவாசனும் 2 முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு மீண்டும் முழுமையாக அமருவதற்காக பல்வேறு சட்டப் பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டுள்ள நிலையில் குற்றப்பத்திரிக்கையில் அவரது நிறுவனம் சேர்க்கப்பட்டிருப்பதால் புதிய இடியாப்பச் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளார் சீனிவாசன்.
இந்தப் புதிய குற்றப்பத்திரிக்கை காரணமாக அவர் நிரந்தரமாக கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்படும் என்று தெரிகிறது.