ரயில்வே பட்ஜெட் தாக்கல்: கட்டண உயர்வு இல்லை
டெல்லி:
பயணிகள், சரக்கு கட்டணத்தில் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை இன்று அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.
2005-06ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஊழல் அமைச்சர்கள்விஷயத்தைக் கிளப்பிய பா.ஜ.க எம்பிக்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து லாலுவுக்கு எதிராக கோஷமிட்டவாரே அவர்கள் வெளியேறினர். பின்னர் லாலு பட்ஜெட் உரையை வாசித்தார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பயணிகள் கட்டணம் உயர்த்தபடவில்லை. சரக்குக் கட்டணத்திலும் உயர்வு இல்லை.
பட்ஜெட்டின் பிற முக்கிய அம்சங்கள்:
இன்டர்நெட் மூலமான ரயில் டிக்கெட் முன் பதிவை இனி காலை 4 முதல் நள்ளிரவு 11.30 வரை மேற்கொள்ளலாம்.
லேண்ட் லைன் போன் இணைப்பு மூலமாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படும்.
மாநில அரசுப் பணிகளுக்கு இன்டர்வியூவுக்கு செல்லும் இளைஞர்கள், பெண்களுக்கு இலவச ரயில் டிக்கெட் வழங்கப்படும்.இதுவரை இந்தச் சலுகை மத்திய அரசுப் பணிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஸ்டடி டூர் செல்ல கட்டணத்தில் 75% சலுகை பெறலாம்.
அதே போல விவசாயிகள், பால் வியாபாரிகள் போன்றவர்கள் தங்கள் தொழில் நிமித்தமான கருத்தரங்குகள் போன்றவற்றுக்குச் செல்ல 50 %சலுகை கட்டணத்தில் செல்லலாம்.
பெரிய அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல 50 சதவீத கட்டண சலுகைவழங்கப்படும்.
இந்த ஆண்டில், நாடு முழுவதும் உள்ள 411 பழைய ரயில் பாலங்கள் சீரமைக்கப்படும். புதிய சரக்கு ரயில் பெட்டிகள் வாங்க தனியாருடன்இணைந்து ரயில்வே செயல்பட உள்ளது. தங்களுக்குத் தேவையான பெட்டிகளை தனியார் நிறுவனங்களே வாங்கி ரயில்வேயிடம் தரலாம்.அதை சலுகை கட்டணத்தில் ரயில்வே இயக்கும்.
நாடு முழுவதும் இந்த ஆண்டில் 1,629 கி.மீ ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்படும்.
5 ஆண்டுகளில் ரயில்வேயை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சரக்குகளின் போக்குவரத்துக்கு இரண்டு அடுக்கு கொண்ட சரக்கு ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றிந் சரக்கு கட்டணம் 3.7% குறைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பயணிகள் போக்குவரத்து8.7 சதவீதமும், சரக்குப் போக்குவரத்து 7.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பயணிகள் அதிகரிப்பால் ரயில்வேக்கு 8 % கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் ரயில்வேயின் 62 சதவீத வருமானம் சரக்குப் போக்குவரத்தின் மூலமே கிடைத்துள்ளது. 30 சதவீத வருமானம் பயணிகள்போக்குவரத்து மூலம் கிடைக்கிறது.
கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் ஊழியர்களுக்கான ஊதியமாகப் போய்விடுகிறது. 17 சதவீதம் எரிபொருளுக்கு செலவாகிறது. 14சதவீதம் பென்சன் வழங்க செலவிடப்படுகிறது.
இந்த ஆண்டில் புதிய ரயில் பாதைகள் அமைக்க ரூ. 645 கோடி, மீட்டர்கேஜ் பாதைகளை அகலப் பாதைகளாக மாற்ற ரூ. 505 கோடி, ரயில்பாதைகளை மின்சார மயமாக்க ரூ. 102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 43 புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 27 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்படவுள்ளது. 10 வாராந்திர ரயில்களின் சேவைஅதிகரிக்கப்படவுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.