"நச்சுக் காற்று பரப்பும் ஆட்சி மரத்தை திமுக வீழ்த்தும்"
திண்டுக்கல் :
நச்சுக் காற்றை பரப்பி வரும் அதிமுக என்ற ஆட்சி மரத்தை வீழ்த்தப் போகும் திருப்புனை மாநாடு தான் இந்த திண்டுக்கல் திமுக மாநாடுஎன்று அம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி கூறினார்.
திமுகவின் தென் மண்டல மாநாடு திண்டுக்கல் அருகே ஓடைப்பட்டியில் பிரமாண்டமாகத் தொடங்கியது. மாநாட்டுக்கு வந்தவர்களைவரவேற்புக் குழு தலைவரான ஐ.பெரியசாமி வரவேற்றுப் பேசினார். அப்போது ஆற்காடு வீராசாமியின் தம்பி மரம் வெட்டியபிரச்சனையில் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட டாப்பிக்கை திமுகவினருக்கே உரிய முறையில் தொட்டுப்பேசினார்.
அவர் பேசியதாவது:
சொல்வதைச் செய்வோம் என்ற இலக்கணப் பாதையில் பயணம் செய்யும் கருணாநிதி, தனது மகன் அழகிரிக்கு தாழ்த்தப்பட்டசமுதாயத்திலேயே அவரது வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுத்தார். பிற்படுத்தப்பட்ட பல சமுதாயத்திலும் மணவினை முடித்துதனது குடும்பத்தை பல மலர்கள் நிறைந்த தோட்டமாக மாற்றியிருக்கிறார்.
சூரியனுக்கே சுறுசுறுப்பை கற்றுக் கொடுத்த உலகத் தமிழ் இனத்தின் வேடந்தாங்கலாக விளங்கும் கருணாநிதியைச் சுற்றித்தான் இன்றையஇந்திய அரசியல் சுழல்கிறது.
இந்திரா காந்தியால் நெருக்கடி கால நெருப்பு எரியூட்டப்பட்ட நேரத்தில் பொதிகைத் தென்றலாக இந்திய மக்களின் இதயங்களில் மருந்துதடவியவர் மக்கள் இயக்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
அதேபோல, இந்தியாவில் அரசியல் சுனாமி அலை எழும்போதெல்லாம் கலைஞரது சுட்டு விரல் யாரை பிரதமராக காட்டுகிறதோ, யாரைகுடியரசுத் தலைவராக காட்டுகிறதோ அவர்கள்தான் மகுடம் சூட்டப்பட்டனர்.
எங்கள் திண்டுக்கல்லையும், தனது சுட்டு விரலால் வைரக் கல்லாக மாற்றிய கலைஞர் அவர்களின் சுட்டு விரலையே சிலர் கேட்கிறார்களே?.அது என்ன நியாயம்.
ஈக்களும், தேனீக்களும் முரண்பட்ட வாழ்க்கை முறையை கொண்டவை. ஈக்கள் கழிவு பொருட்களை உண்டு, உயிருக்கு ஊறு விளைவிக்கும்பல நோய்களின் உற்பத்தி சாலைகளாக இயங்குகின்றன. ஆனால் தேனீக்களோ, பல மலர்களில் மகரந்த குழம்புகளையும், மருந்தாகவும்பயன்படும் தேனையும் உருவாக்கும் மருத்துவமனையாக பயன்படுவன.
இன்றைய ஆட்சி ஈக்களின் ஆட்சி. எதிர்காலத்தில் கோட்டையிலே குறிஞ்சி தேன்கூடு கட்டும் தேனீக்கள்தான் இங்கே குழுமியிருக்கும்இளைஞரணி படை வரிசை.
தமிழகத்தில் நச்சுக் காற்றைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஆட்சி மரத்தை மக்களாட்சி முறையில் வீழ்த்துவதற்கு கலைஞரால் வழி வகுத்துத்தரும் மாநாடு இந்த திண்டுக்கல் மாநாடு.
தலைவர் அவர்களே, எனக்குள் பொதிந்து கிடக்கும் ஆசையை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். புழுவாய் பிறக்கினும் புண்ணியா நன்அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தர வேண்டும் என்று அப்பர் அடிகள் இறைவனிடம் தன் ஆசையை வேண்டுதலாய் கேட்பார்.
நான் என் தலைவர் இடத்திலே வரம் கேட்கிறேன். தலைவா, என் வாழ்க்கையில் இறுதி நிலையில் உன் ஒரு சொட்டு கண்ணீரை எனக்கு நீ தரவேண்டும் என்றார் பெரியசாமி, கண்களில் நீர் கோர்த்தபடி.