சேப்பல் விவகாரம்-தப்பினார் டெண்டுல்கர்
டெல்லி:சேப்பலை விமர்சித்தது தொடர்பாக சச்சின் டென்டுல்கரும், யுவராஜ் சிங்கும் கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் லீக் சுற்றிலே வெளியோறியது.
உலக கோப்பை தோல்வி குறித்து பயிற்சியாளர் சேப்பல் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுத்த அறிக்கையில் சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுவதாக கூறியிருந்தார்.
இதற்கு சச்சினும், யுவராஜ் சிங்கும் சேப்பலை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதனால் கிரிக்கெட் வாரியம் சச்சினிடமும், யுவராஜ் சிங்கிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு இருவரும் நேற்று விளக்கம் அளித்து கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் சச்சின், யுவராஜ் சிங்கின் விளக்கம் திருப்தி அளிப்பதாகவும், இப்பிரச்சனை இத்துடன் முடித்து விட்டதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
ஆனால் கடிதத்தில் கூறியுள்ள விவரங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
கடிதத்தில் தனது பேட்டிக்கு டெண்டுல்கர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், அதே போல யுவராஜும் ரொம்பவே இறங்கி வந்து பதில் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.