கருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது
சென்னை: முதல்வர் கருணாநிதியின் வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் உமறுப் புலவர் விருது வழங்கப்படவுள்ளது.
இஸ்லாமிய இலக்கிய கழக இயக்குநர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலாளர் இதாயத்துல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 7வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளை நிதியமைச்சர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார். அமீர் அலி தலைமை தாங்குகிறார். ஆளுநர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு வாழ்நாள் இலக்கிய சாதனைக்காகவும், இஸ்லாமிய சமுதாயத்திற்கு காட்டும் ஆதரவுக்காகவும் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய உமறுப்புலவர் விருதை மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான் வழங்கிறார்.
மத்திய அமைச்சர் வாசன் தமிழறிஞர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார். மாநாட்டு மலரை இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமீர் அலி ஆகியோர் வெளியிட எம்.பி ஜே.எம்.ஹாரூண் பெற்றுக் கொள்கிறார்.
தவத்திரு குன்றகுடி அடிகளார் தலைமையில், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இந்த மாநாட்டை இதயங்கள் இணைப்புக்கு இலக்கியம் என்ற தலைப்பில் நடத்துகிறோம்.
இந்த மாநாட்டில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கோற்கின்றனர். 300 ஆய்வுக் கட்டுரைகளும், 35 புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. அதில் 10 அரிய நூல்களாகும்.
பல நூற்றாண்டுகளாக தமிழ் அறிஞர்கள் இயற்றிய இஸ்லாமிய இலக்கியங்களை இலவசமாக புத்தகவடிவில் புதுப்பித்து கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
குறைந்த பட்சம் 5 பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளை ஏற்படுத்தி அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 தன்னாட்சி கல்லூரிகளில் இஸ்லாமிய இலக்கியத்துறைகளை ஏற்படுத்தி ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்குவது, அவர்கள் தங்கி படிப்பதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பண்பாட்டு மையம் ஏற்படுத்தவும், நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.