செங்கோட்டை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீஸ்-இந்து முன்னணி மோதல்
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் ஒரு மணி அளவில் வண்டி மறிச்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஓம் காளி திடலில் பக்த கோஷங்கள் முழங்க, கேரள செண்டை மேளம், வாணவேடிக்கை, ஆடல் பாடலுடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். ஊர்வலம் வலலம் ரோடு, செல்வ விநாயகர் கோவில் தெரு, மேலூர், பள்ளிவாசல் தெரு, காசுக்கடை பஜார் வழியாக சென்றது.
மேலூர் பள்ளிவாசல் அருகே சென்றபோது போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் சில நிமிடங்களில் நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதே போல் தபால் நிலையம் அருகிலும் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் தங்களை போலீசார் தாக்கியதாக புகார் தெரிவித்தனர்.
தென்காசியில் ..
தென்காசியில் இந்த ஆண்டு நடந்த மோதல்கள் காரணமாக பல இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
காசிவிஸ்வநாதர் ஆலயம் முன்பு மட்டும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் நேற்று மாலையில் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்தை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் துவக்கி வைத்து ரத வீதிகள் முழுவதும் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தார்.
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமம் தைக்கா முக்கில் அமைந்துள்ள ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகர் கோவில் முன்பு அமைந்துள்ள ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகர் சிலைக்கு ரூ.500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 61 நோட்டுகள் ரூபாய் 30 ஆயிரத்தி 500 மாலையாக அணிவிக்கப்பட்டடது.
டிஎஸ்பி மீது பாஜக புகார்:
கடந்த 16ம் தேதி செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது டிஎஸ்பி மயில்வாகணனுடன் வந்த சிறப்பு படை போலீசார் தாக்கியதாகவும், வழக்கு போடுவதாக கூறி மிரட்டி வருவதாகவும் முன்னாள் பாஜக நகர தலைவர் வர்மா எஸ்.தங்கராஜ், விநாயகர் சதுர்த்தி குழு தலைவர் இசக்கிமுத்து ஆகிய இரண்டு பேரும் டிஎஸ்பி மீதும் அவருடன் வந்த காவலர் மீதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.