ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்
கரூர்: பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக கரூரில் ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் ஆகியுள்ள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விஜயகோதண்டராமன். இவர் கடந்த ஜனவரி 31ம் தேதி (வியாழக்கிழமை) பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இவர் ஒய்வு பெறுவதை முன்னிட்டு சக ஊழியர்கள் அன்றைய தினம் இரவு கரூர் பசுபதீஸ்வர் ஆலயம் அருகில் நகரத்தார் திருமண மண்டபத்தில் இவருக்கு பிரிவு உபச்சார விழா வைத்திருந்தனர்.
இந்நிலையில், விஜய கோதண்டராமன் முன்பு ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது இவர் பதிவு செய்த ஒரு எப்.ஐ.ஆர். நகலை தவற விட்டுவிட்டாரம். இது குறித்து அவர் முறையாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கவில்லையாம்.
மேலும் காணாமல் போன எப்.ஐ.ஆர். குறித்து அவரிடம் கேட்டதற்கு, தனக்கு அதுகுறித்து எந்த விபரமும் தெரியாது என கூறியுள்ளார். இதனால் பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்தால் எஸ்.ஐ. விஜய கோதண்டராமன் திடீர் என சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் அவருக்கு நடத்தப்பட இருந்த பிரிவு உபச்சார விழா ரத்து செய்யப்பட்டது. ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.