Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்புக்கு நான் அடிமை-விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு ஆணவமே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி பதில் தந்துள்ளார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 நாட்களாக நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பேசியதற்கு முதல்வர் கருணாநிதி அறிக்கை தந்துள்ளார். ஆட்சியிலே என்ன அலங்கோலம்? அவற்றை சட்டமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு சந்து முனையிலே சிந்து பாடலாமா? என்கிறார் கருணாநிதி.

சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு கொடுக்கப்படுகின்ற காலம் மிகமிகக் குறைவு. அப்படியிருந்தாலும் அமைச்சர்களுடைய குறுக்கீடுகள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

இருந்தபோதும் இந்த முறை நான் சட்டமன்றத்தில் பேசுவதாக இருந்த நாளில் என் தொகுதியில் கட்சி நிர்வாகி ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் நான் தொகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இதை முறைப்படி சபாநாயகரிடம் பேக்ஸ் மூலம் தெரிவித்து இருக்கிறேன்.

1991ல் இருந்து நீங்கள் எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் சட்டசபை பக்கம் கையெழுத்து போடுவதற்கும், சம்பளம் வாங்குவதற்கும் தவிர சட்டசபை பக்கம் போனதே கிடையாது.

தனது ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு போட்ட திட்டங்களை பட்டியலிட்டு இவையெல்லாம் அலங்கோலமாக தெரிகிறதா? என்று கேட்கிறார். திட்டங்களை நான் அலங்கோலம் என்று சொல்லவில்லை. அவை நிறைவேற்றப்படுகின்ற முறையில் தான் அலங்கோலம் தலைவிரித்து ஆடுகிறது.

முதல்வரின் 11வது திட்டக்குழு அறிக்கையின்படி ஏழைகளின் எண்ணிக்கை படிப்படியாக கூடி தற்போது 22 சதவீதத்தை எட்டியுள்ளது. இது ஆட்சி அலங்காரம் என்று கருணாநிதி பார்க்கிறார். அலங்கோலம் என்று நான் பார்க்கிறேன்.

கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக வாக்குசாவடிகளை கைப்பற்றியும் தன் விருப்பப்படி அராஜகத்தால் கள்ள ஓட்டுகளைக் அளித்ததும், வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்கட்சியை சார்ந்த வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றதாக அறிவித்ததும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுதேர்தல் நடத்தியதும்,

கூட்டுறவு சங்க தேர்தலை அறிவித்து விட்டு முறைகேடுகள் காரணமாக இன்று வரைக்கும் நடத்த இயலாமல் உள்ளதே.. இவையெல்லாம் முதல்வரின் கண்ணுக்கு அலங்காரமாக தெரிகிறது. எனது பார்வையில் அலங்கோலமாக தெரிகிறது.

மதுரையில் நர்ஸ் ஒருவர் இறந்த போது விசாரணை முடிவதற்குள் பெற்றோரின் சம்மதம் கூட இல்லாமல் இரவோடு இரவாக போலீசை வைத்து உடலை எரித்தது ஏன்?. இது அலங்காரமா? அலங்கோலமா?.

இன்றைய நிலவரப்படி 49.7 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்துக் கிடக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைவாய்ப்பு தேடி அல்லல்படுகிறார்கள். இந்த இளைஞர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

பொருளாதாரம் வளர்ச்சி நிலையை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாடு பின்தங்கி கிடக்கிறது. கழக அரசுகள் கவர்ச்சி திட்டங்களில் காட்டும் அக்கறையை வளர்ச்சி திட்டங்களில் காட்டவில்லை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

நான் என்னை புத்தர் என்றும், மற்றவர்களை அயோக்கியர்கள் என்ற ரீதியிலும் பேசுவதாகவும் கருணாநிதி குற்றம் சாட்டுகிறார்.

என்னைப் பொருத்தவரை கோடான கோடி பாமரர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணம் கொண்டவனே தவிர இலக்கிய, இலக்கணம் கற்று டாக்டர் பட்டம் பெற்று தமிழினத் தலைவராக தன்னைக் கருதிக்கொள்ளும் கருணாநிதியைப் போல என்றும் நான் என்னை நினைத்தது இல்லை.

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முன்னுரிமைத் திட்டங்களில் கழகங்கள் மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருக்கும் அக்கறை செலுத்தவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. கச்சத்தீவை பற்றி எனக்கு தெரியுமா? என்று கருணாநிதி கேட்கிறார்.

1967ல் அண்ணா ஆட்சியை பிடித்ததும், 1969ல் அண்ணா மறைந்ததும், இவர் முதல்வர் ஆனதும் எனக்கு தெரிந்திருக்கும் போது 1974ல் நடந்த கச்சத்தீவு விவகாரம் மட்டும் எனக்கு தெரியாமல் போகும் என்று எந்த அடிப்படையில் சந்தேகப்படுகிறார்.

கச்சத்தீவை தாரைவார்த்தது மட்டும் இல்லை. ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்கும் உரிமையை பறிக் கொடுத்ததும் அதை திரும்ப பெற எந்தவிதமான முயற்சி எடுக்கப்படாததும் காவேரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் முறையாக தமிழகத்திற்கு பெறவேண்டியதை கூட தேசிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தபோது ஏன் பெறவில்லை என்றும் பேசினேனே தவிர வேறு என்ன?.

தமிழர்களின் நீண்டநாள் கனவாகிய சேதுசமுத்திர திட்டம் இன்று திரிசங்கு சொர்க்கமாக இருப்பதற்கு காரணம் தாங்கள் ராமரைப் பற்றி அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்' என்று மக்களின் உணர்வை புண்படுத்தும் விதத்தில் விமர்சித்தது தான் என்பது நாடறிந்ததே.

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தொடக்க நாளாக அறிவித்த சட்டம் கொண்டு வர கால தாமதம் ஏன்? என்ற என் கேள்விக்கு தமிழ்நாடு என்ற பெயரை வைக்க அறிஞர் அண்ணா ஏன் கால தாமதம் செய்தார் என்று நான் கேட்கவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்.

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆனால் 5வது முறை முதலமைச்சர் ஆன பிறகுதான் தமிழ் புத்தாண்டு தை முதல் நாளை அறிவித்தீர்களே ஏன் இதை முன்பே செய்யவில்லை? என்பதே என் கேள்வி.

நான் ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்கிறார். தங்களை போன்ற அரசியல் சாணக்கியர் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நல்ல நம்பிக்கையில் ஏமாந்ததால்தான் கட்சி ஆரம்பிக்க காலதாமதம் ஏற்பட்டது.

கட்சி ஆரம்பிப்பதிலுள்ள கஷ்டம் கருணாநிதிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. புதிதாக வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டிய வீட்டில் குடிபுகுவதற்கும் வித்தியாசம் உள்ளதை புரிந்து கொண்டால் போதுமானது.

இலவச மின்சாரம் என்று திட்டம் போட்டுவிட்டு மின்சாரமே கிடைக்காமல் இருந்தால் என்ன பயன்?. பற்றாக்குறையை சரிசெய்ய இதர மாநிலங்களிடமும், இந்திய அரசிடமும் கேட்டுள்ளேன் என்று தாங்கள் சொல்வதற்கு இங்கே போதுமான உற்பத்தி செய்யவில்லை என்பதே காரணம். இதுதான் ஒரு அரசின் லட்சணமா? என்பது என் கேள்வி.

நடிகரை பார்ப்பதற்காக கூடும் ரசிகர்களை கட்சிக்காரர்களின் கூட்டமாக கருதிக்கொண்டு நான் பேசுவதாக முதல்வர் கருணாநிதி எடுத்துரைக்கிறார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. பிறகு எம்.ஜி.ஆரின் தொண்டர்களை விசிலடித்தான் குஞ்சுகள் என்று நினைத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி அவர் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிக்கு வரமுடியாமல் அவதிப்பட்டவரும் கருணாநிதியே.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+