துபாயில் ரூ.6 லட்சம் மோசடி- சென்னை காபரே நடன பெண்ணுக்கு வலை
சென்னை: துபாயில் தமிழக அதிகாரியை மயக்கி ரூ.6 லட்சம் மோசடி செய்த சென்னை காபரே நடன பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகையை சேர்ந்த ஜாபர் சாதிக் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
நான் துபாயில் ஈஸ்ட் கோஸ்ட்' என்ற நிறுவனத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிகிறேன். கடந்த 2006ம் ஆண்டு துபாயில் வசிக்கும் தமிழக நண்பர் ஒருவர் மூலம் புவனேஸ்வரி என்ற காபரே நடனப் பெண் எனக்கு அறிமுகமானார்.
அவர் என்னை காதலிப்பதாக சொல்லி நெருக்கமாக பழகினார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். எனக்கு மனைவியாக வரப் போகிறவர் என்ற நம்பிக்கையில் நான் புவனேஸ்வரிக்கு ரூ.3 லட்சம் பணம், தங்க நகைகளை தந்தேன். ரூ.6 லட்சம் வரை அவருக்கு செலவு செய்துள்ளேன்.
தமிழகம் திரும்பியவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று புவனேஸ்வரி என்னிடம் கூறினார். கடந்த மாதம் 8ம் தேதி நானும், புவனேஸ்வரியும் தமிழகம் வந்தோம். நான் எனது சொந்த ஊருக்கு போய்விட்டேன். அதன்பிறகு புவனேஸ்வரியை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்.
இதுபற்றி புவனேஸ்வரியிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. சென்னை அயனாவரத்தில் அவர் வசிப்பதாக முகவரி கொடுத்திருந்தார். அயனாவரத்தில் வந்து பார்த்தபோது, அவர் போலியான முகவரி கொடுத்தது தெரியவந்தது.
சென்னை புளியந்தோப்பில் புவனேஸ்வரியின் சகோதரர் வசிக்கிறார் என்று சொன்னார்கள். உடனே புளியந்தோப்புக்கு சென்று புவனேஸ்வரியின் சகோதரரை சந்தித்து பேசினேன். ஆனால் அவர் என்னிடம் பிடிகொடுத்து பேசவில்லை.
புவனேஸ்வரி பற்றி விசாரித்தபோது, எனக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அவர் 2 பேரை திருமணம் செய்து ஏமாற்றியவர் என்றும், அவருக்கு ஆண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் புவனேஸ்வரியின் உறவினர்கள் கூறினார்கள்.
புவனேஸ்வரி உண்மையிலேயே ஏற்கனவே திருமணமானவரா என்பது பற்றி விசாரித்து, அவர் நேர்மையான பெண் என்று தெரிந்தால் அவரை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர் ஏமாற்று பேர்வழியாக இருந்தால் அவருக்காக நான் செலவு செய்த பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சாதிக்.
இந்த மனு தொடர்பாக, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை புளியந்தோப்பு உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.