ராஜ்யசபா தேர்தல்: காங்.- கெளடா புதிய கூட்டணி
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதையடுத்து ராஜ்யசபா- சட்டமேலவைத் தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் இடையே புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரலாம் எனக் கருதப்படுகிறது.
கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த பலத்தின் மூலம் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்தில் அக் கட்சி வெற்றி பெறும். ஆனால், இரண்டாவது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அக் கட்சிக்கு மேலும் 18 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இதையடுத்து தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை காங்கிரஸ் கோரியது. அந்தக் கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிருத்விராஜ் செளஹான் பெங்களூரில் கெளடா-முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க கெளடா முன் வந்துவிட்டார். இதில் ஒரு இடத்தில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மனு தாக்கல் செய்துவிட்டார். இரண்டாவது வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பெல்லாரி சுரங்க அதிபரான கோடீஸ்வரர் அனில் லாட் போட்டியிடுகிறார்.