உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மாயாவதி
உலகின் முன்னணி பத்திரிக்கையான போர்ப்ஸ் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தில், பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷீலா பெயர் இருக்கிறார்.
மாயாவதி சாதனை - சோனியாவுக்கு பின்னடைவு:
இந்தப் பட்டியலில், சோனியா காந்திக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவர் 6வது இடத்தில் இருந்து வந்தார். ஆனால் தற்போதைய பட்டியலில் சோனியா காந்தி 21வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்.
அதேசமயம், முதல் முறையாக இந்த பட்டியலில் நுழைந்துள்ள மாயாவதி, எடுத்த எடுப்பிலேயே 59வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சோனியா, மாயாவதி குறித்து போர்ப்ஸ் கூறுகையில், இந்தியாவின் ஆளும் கூட்டணியின் தலைவர் பதவியை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார் சோனியா. இருப்பினும் தலித் தலைவியான மாயாவதி அவருக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறார்.
தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருக்கும் மாயாவதி, எதிர்கால பிரதமர் வேட்பாளராகவும் முன்னணியில் உள்ளார்.
1995ம் ஆண்டு, 39 வயதாக இருக்கும்போது அவர் இளம் அரசியல் தலைவராக உருவெடுத்தார். மேலும் உ.பி. மாநிலத்திந் முதல் தலித் முதல்வராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் தலித் பிரதமராகும் தகுதியும் அவரிடம் உள்ளதாக பெருவாரியாக கருதப்படுகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளது.
மாயாவதிக்குப் பின்னால் அயர்லாந்து அதிபர், பின்லாந்து அதிபர், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி உள்ளிட்டோர் வருகின்றனர். இங்கிலாந்து அரசி எலிசபெத், மாயாவதிக்கு ஒரு இடம் முன்னால் (58) உள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்தியரான பயோகான் தலைவர் கிரண் மசூம்தார் 99வது இடத்தில் இருக்கிறார்.
3வது இடத்தில் இந்திரா நூயி:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி 5வது இடத்திலிருந்து முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் 6 இடங்களில் அமெரிக்கர்களே உள்ளனர்.
சோனியா காந்திக்குப் பின்னால் கிளிண்டன் மனைவி ஹில்லாரி கிளிண்டன், பில்கேட்ஸ் மனைவி மெலிந்தா, ஜார்ஜ் புஷ் மனைவி லாரா புஷ் ஆகியோர் உள்ளனர்.