காவிரி- கட்டளை- குண்டாறு நதிகளை இணைக்க ரூ.169 திட்டம்
சென்னை: தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல்படியாக காவிரி- கட்டளை- குண்டாறு நதிகளை இணைக்க ரூ. 169 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் பொதுப்பணித் துறையில் காலியாக இருந்த இடங்களுக்கு கடந்த ஆண்டு 57 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இன்று 156 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் இன்னல்களை நீக்க பொதுப்பணித் துறையினர் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கி உதவ வேண்டும்.
மாநிலத்தில் உள்ள நதிகளை மூன்று கட்டங்களாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி- கட்டளை- குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ. 169 கோடி யில்நிறைவேற்றப்படும். இதற்கான டெண்டர் விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
அடுத்ததாக தாமிரபரணி- கருமேணியாறு இணைப்புத் திட்டத்தை ரூ. 369 கோடி ரூபாயில் நிறைவேற்றவுள்ளோம்.
இதைத் தொடர்ந்து தென்பெண்ணை- செய்யாறு இணைப்புத் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய அரசின் குழு அறிக்கை அளித்து, அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், கேரள அரசு மட்டும் அந்த அணை பலமில்லை என்று கூறி, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. அதற்கு அவசியமே இல்லை என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
கேரளாவின் இந்தப் போக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அந்த அரசு மதிப்பளிக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது என்றார் துரைமுருகன்.