புலிகளின் கடும் தாக்குதலில் 140 ராணுவத்தினர் பலி
கொழும்பு: விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குலில், 140 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கிளிநொச்சிக்குள் நுழைய முயன்ற ராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.புலிகளின் இந்த ஆவேசத் தாக்குதலில் 350க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். 26 உடல்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளதாவது:
குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும், நான்கு முனைகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இலங்கை ராணுவம் முன்னேறி வந்தது.
பல குழல் வெடிகணைகள், ஆர்ட்டிலரிகள் மற்றும் கனரக போர்க்கலங்களின் ஆதரவுடன் முன்னேறி வந்த இலங்கைப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதை சமாளிக்க முடியாமல் இலங்கைப் படையினர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். இந்த கடும் தாக்குலில் 130 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
18 ராணுவ வீரர்களின் உடல்களையும், பெருமளவிலான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ராணுவ முன்னேற்றத்தை முறியடித்த விடுதலைப் புலிகள் 40-க்கும் அதிகமான இலங்கைப் படையினரைக் கொன்றனர்.
120-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இங்கு எட்டு ராணுவத்தினரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தகவலை ராணுவம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் புலிகள் தரப்பில்தான் 120 பேர் பலியானதாக அது தெரிவித்துள்ளது.