சுதந்திர தின விழாவில் தமிழில் பேசிய ராஜபக்சே
கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழாவில் பேசிய அதிபர் ராஜபக்சே, அவ்வப்போது தமிழிலும் பேசினார்.
கடந்த ஆணடு ஐ.நா. கூட்டத்தில் பேசிய ராஜபக்சே திடீரென தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஐ.நா. சபையில் முதன் முதலில் தமிழில் பேசிய தலைவர் இவர்தான்.
இருப்பினும் தமிழர்களை கவரவும், உலக சமுதாயத்தினருக்கு தான் தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் பாசத்துடன்தான் இருப்பதாக காட்டிக் கொள்ளவுமே இவ்வாறு ராஜபக்சே தமிழில் பேசியதாக கருத்து எழுந்தது.
பின்னர் சமீபத்தில் தமிழில் ராஜபக்சே பேசியதன் வீடியோ தொகுப்பு வடக்கிலும், கிழக்கிலும் மக்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த இலங்கை சுதந்திர தின விழாவின்போது சிங்களத்துக்கு இடையே தமிழிலும் அவ்வப்போது பேசினார் ராஜபக்சே.
நாம் எல்லோரும் ஒரு தாய்க்கு பிறந்து இருக்கிறோம். தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்குவோம். வடக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு ஆக்கபூர்வ பணிகளை மேற்கொள்வோம் என்று தமிழில் கூறினார் ராஜபக்சே.
அதேபோல, இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனில் அக்கறைகொள்வது எனது கடமை. அதை முழுமையாக செய்வேன். சிங்கள மக்கள், எந்த வித வேறுபாடும் இன்றி செயல்பட வேண்டும் என்றும் தமிழில் கேட்டுக் கொண்டார்.