இ.கம்யூ செயலாளர் தா.பாண்டியன் கார் எரிப்பு
சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன்.
ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார்.
மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வழக்கு தொடரப்படும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.
சம்பவம் நடந்த போது பாண்டியன் வீட்டில் இல்லை. மதுரையில் இருக்கிறார் பாண்டியன்.
நல்லகண்ணு கண்டனம்
தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவத்திற்குப் பின்னால் சதி அடங்கியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர் கதையாகி விட்ட வன்முறை - தா.பாண்டியன்
தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிக்கப்பட்டது குறித்து தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வீட்டில் இல்லை. எனது மனைவி மட்டுமே வீட்டில் இருக்கிறார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. கார் எரிக்கப்பட்டது முதலி்ல் அவருக்குத் தெரியாது.
எதிர் வீடுகளில் இருப்பவர்கள்தான் காலையில் பார்த்து விட்டு மனைவியிடம் தெரிவித்துள்ளனர். போலீஸாருக்கும் தகவல் போயுள்ளது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது முதலே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்றார் பாண்டியன்.