7 ஏக்கர்-ஓசி மின்சாரம்-குழந்தைக்கு ரூ.1 லட்சம்: சிரஞ்சீவி
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் சந்திக்கும் முதல் தேர்தல் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபைக்கான பொதுத் தேர்தல். எனவே வலுவான வாக்குறுதிகளை அவரது கட்சி அறிவித்துள்ளது.
பிரஜா ராஜ்ஜியத்தின் தேர்தல் அறிக்கையை மூத்த தலைவர் சிவசங்கர் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இதை நேற்று கட்சியின் இன்னொரு மூத்த தலைவரும், முன்னாள் தெலுங்கு தேச தலைவருமான உபேந்திரா வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில் குவிந்து கிடக்கும் வாக்குறுதிகள் விவரம்...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ..
நிலமற்ற விவசாயிகளுக்கு தலா இரண்டரை ஏக்கர் விளை நிலம், 5 ஏக்கர் தரிசு நிலம் தருவோம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இன குடியிருப்புகளுக்கு இலவச மின்சாரம் தருவோம்.
பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியளிப்போம்.
மூத்த குடிமக்கள், விவசாயிகளுக்கு பென்ஷன் தருவோம்.
பழங்குடியினர் நலனுக்காக தனி ஆணையம் அமைப்போம்.
மகளிருக்கான இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்கப் பாடுபடுவோம். முதலில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற பாடுபடுவோம்.
நலிந்த பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தரப்படும் நிதியுதவியை ரூ. 1லட்சமாக உயர்த்துவோம்.
அரசு ஊழியர்களுக்கான இடைக்கால நிவாரணத்தை மேலும் 10 சதவீதம் அதிகரிப்போம்.
மூத்த குடிமக்களின் குறைகளைத் தீர்க்க தனிப் பிரிவு தொடங்குவோம்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விவசாய விளை நிலங்களை ஒதுக்கும் முடிவை மறு பரிசீலனை செய்வோம்.
மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50 சதவீத கட்டணச் சலுகை தருவோம்.. என்று நீளுகிறது சிரஞ்சீவி கட்சியின் வாக்குறுதிப் பட்டியல்.