திருப்பதி தொகுதியில் சிரஞ்சீவி போட்டி
ராஜமுந்திரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சிரஞ்சீவி பேசுகையில்,
சட்டமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால், எனது சொந்த ஊரான நரசாபுரத்திலும் போட்டியிடுவேன்.
புது முகங்கள் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் நூறு பேர் பிரஜா ராஜ்ஜியம் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள்.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இருவரும் உயர்சாதிக்காரர்கள்.
தெலுங்குதேசம் நடத்திய 9 ஆண்டு கால ஆட்சி மற்றும் காங்கிரசின் 5 ஆண்டு ஆட்சி என ஆந்திர மக்களுக்கு 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது. இவர்களால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அவர்களின் சமுக மதிப்பும் உயரவில்லை.
பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில் மெளன புரட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் அமோக வெற்றிபெறும்.
சந்திரபாபு நாயுடு படு துணிச்சலாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தார். தற்போது ராஜசேகர ரெட்டியோ அதை விட பல மடங்கு ஊழல் செய்துள்ளார். இந்த ஊழல் தலைவர்களுக்கு மக்களைப் பற்றியோ, சட்டத்தைப் பற்றியோ துளியும் பயமி்ல்லை.
பிரஜா ராஜ்ஜியம் ஆட்சிக்கு வந்தால் ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்படும். பின்னர் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
இரு தலைவர்களின் குடும்பங்களிடம் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிப்போம். அவர்கள் குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்களுக்கு உரிய கணக்கு கேட்போம்.
எனவே ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஆதரியுங்கள் என்றார் சிரஞ்சீவி.
கூட்டணி சிக்கலில் நாயுடு...:
மூன்றாவது அணியில் இணைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
ஆந்திராவில் 294 சட்டமன்ற மற்றும் 42 எம்.பி தொகுதிகளும் உள்ளன. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 45 சட்டசபை தொகுதிகளையும், 10 எம்பி தொகுதிகளையும் கேட்கிறது.
இதில் ஒன்று குறைந்தால் கூட கூட்டணியை விட்டு விலகிவிடுவோம் என்று எச்சரித்துள்ளது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 எம்.பி. தொகுதி மற்றும் 20 சட்டசபை தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்து வருகின்றன.
இதனால் பெரும் குழப்பத்தில் உள்ள சந்திரபாபு நாயுடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு வருகிறார்.