புதுச்சேரி தேமுதிகவில் அதிரடி மாற்றம்
புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் தேமுதிகவை மறு சீரமைத்து வருகிறார் அதன் தலைவர் விஜயகாந்த்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாமக போட்டியிட்டு வென்றது. எந்த கூட்டணியில் இருந்தாலும் பாமக இம்முறையும் அங்கு போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தேமுதிக தனது அரசியல் எதிரியான பாமகவுக்கு புதுச்சேரியில் சவால் கொடுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் தேமுதிகவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்சியின் நிர்வாக வசதிக்காக அம்மாநிலத்தை புதுச்சேரி கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, காரைக்கால் என 5 பிரிவாக முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரி மாநில தேமுதிக துணை செயலாளர்களாக பதவி வகித்து வரும் குமாரவேலு, தனசேகரன், அசனா ஆகியோர் இன்று முதல் மாநில துணை செயலாளர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
முத்தியால் பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, ராஜ்பவன், காமராஜர் நகர், உப்பளம் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கிய புதுச்சேரி கிழக்கு பகுதிக்கு கணேஷ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
ஊசுடு, வில்லியனூர், மங்களம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுச்சேரி மேற்கு மாவட்ட செயலாளராக தனசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏம்பலம், முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, பாகூர் ஆகிய தொகுதிகள் உள்ளடக்கிய தெற்கு மாவட்ட செயலாளராக குமாரவேலு செயல்படுவார்.
உழவர்கரை, தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கதிர்காமம், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, மாகி நகராட்சி ஆகியவை அடங்கிய வடக்கு மாவட்டத்துக்கு செல்வம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி - டி.ஆர். பட்டினம், ஏனாம் நகராட்சிகளை கொண்ட காரைக்கால் மாவட்ட செயலாளராக அசனா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
புதிய மாவட்ட செயலாளர்களுக்கு தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.