விடுதலைப் புலிகள் பல முனைத் தாக்குதல் - திணறும் ராணுவம்
வன்னி: வன்னிப் பிரதேசத்தில் பல முனைகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் புதன்கிழமை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளையில் இரணைப்பாலை அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச் சந்தி ஆகிய இடங்களில் புதன்கிழமை முன்நகர்வில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றனர்.
மந்துவில் சந்தி பகுதியை நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கமாண்டோக்கள் இந்த முன்நகர்வில் ஈடுபட்டனர். ஆனால் புலிகளின் கடுமையான தாக்குதலால் ஏஅது முறியடிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடிக்கு அருகாமையில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன.
இரண்டு ராணுவத்தினரின் உடல்களையும், படையினரின் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர்.
49 தமிழர்கள் படுகொலை
இதற்கிடையே, வன்னியில் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில் 49 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்த போது அதற்கு அருகே இலங்கைப் படையினர் கடும் தாக்குதலை நடத்தினர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான அம்பவலவன்பொக்கணை, மாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் இடைக்காடு பகுதிகளை நோக்கி இந்த தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. கொல்லப்பட்டவர்களில் அன்னலட்சுமி என்பவர் கர்ப்பிணி ஆவார்.