சிவானந்தன் உடலுக்கு புலிகள் கொடி போர்த்தி அஞ்சலி!!
பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார்.
கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
தீப்பற்றி எரிந்த நிலையிலும் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்த அவர் சிறிது நேரத்தில் சரிந்து விழுந்தார்.
தகவல் அறிந்த போலீசார் வந்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடலில் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த பழ. நெடுமாறன் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று சிவானந்தன் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வந்து பார்த்தார்.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சிவானந்தன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கரூரில் உள்ள சிவானந்தன் உறவினர்கள் கதறியழுதபடி சென்னைக்கு புறப்பட்டு சென்று அவரது உடலை வாகனம் மூலம் நள்ளிரவில் கரூர் கொண்டு வந்தனர்.
சிவானந்தன் உடல் வந்த சில நிமிடங்களில் மதிமுக பொதுச் செயாலளர் வைகோவும், நள்ளிரவில் சிவானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு கதறி அஞ்சலி செலுத்தினார்.
வைகோ கண்களில் இருந்து கண்ணீர் வருவதைக் கண்ட அவரது நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிபதிராஜா ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்பாக சிவானந்தன் உடலுக்கு போலீசார் முன்பாகவே விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் கொடி போர்த்தப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கரூர் காவல் துறை தகவல் தந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.