தமிழகத்தில் காங். 9ல் வெற்றி- இழுபறிக்கு பின் ப.சி வெற்றி: இளங்கோவன்-தங்கபாலு தோல்வி
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வென்றுள்ளது. ப.சிதம்பரம் கடும் இழுபறிக்குப் பின் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
மத்திய அமைச்சர்களான இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
இழுபறிக்குப் பின் வென்ற ப.சிதம்பரம்:
சிவகங்கை தொகுதியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே அதிமுகவின் ராஜ கண்ணப்பன்தான் முன்னிலையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின் தங்கியிருந்தார்.
இறுதியில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, ப.சிதம்பரம் 300 வாக்குகள் கூடுதலாக பெற்றதாக கூறப்பட்டது.
இதற்கு ராஜ கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலங்குடி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு ஆலங்குடி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் ப.சிதம்பரம் 3049 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலில் 300 வாக்குகள் கூடுதல் என்று கூறி விட்டு இப்போது 3000 வாக்குகள் கூடுதல் என்று கூறுவதால் மிகப் பெரிய மோசடி நடக்கிறது. எனவே மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மறுபடியும் ஆலங்குடி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில், 3354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குகள் விவரம்..
ப.சிதம்பரம் - 3,34,348.
ராஜ கண்ணப்பன் - 3,30,994.
திண்டுக்கலில் காங்கிரஸ் வெற்றி:
திண்டுக்கல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியி்ன் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியத்தை விட 54 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்று சித்தன் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம்-விஸ்வநாதன் வெற்றி:
காஞ்சிபுரம் தனி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன், 3,30,237 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3,17,134 வாக்குகளைப் பெற்று, 13,103 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தேனி-ஆரூண் வெற்றி:
தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் 5,532 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் ரஷித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 3 லட்சத்து 45 ஆயிரத்து 418 வாக்குகள் பெற்று, 5,532 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஆரூண் தற்போது தேனியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 3 லட்சத்து 39 ஆயிரத்து 886 வாக்குகள் பெற்று, தோல்வியை தழுவினார்.
நெல்லை- காங். ராமசுப்பு வெற்றி:
நெல்லை தொகுதியில் கடும் இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று விட்டது.
நெல்லையில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவை விட அதிமுக வேட்பாளரான அண்ணாமலை தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ராமசுப்பு திடீரென முன்னணிக்கு வந்தார். இறுதியில், 21 ஆயிரத்து 303 வாக்குகள் வித்தியாசத்தில் ராமசுப்பு வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
மொத்த வாக்குகள்: 10,53,645
பதிவானவை: 7,01,048
ராமசுப்பு (காங்.) - 2,74,932
அண்ணாமலை (அதிமுக) - 2,53,629
மைக்கேல் ராயப்பன் (தேமுதிக) - 94,562
கரு. நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) - 39,997
வைகோவை வீழ்த்திய மாணிக் தாகூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.
முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாணிக் தாகூரும், கார்த்திக்கும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன் நிறுத்தப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே வைகோவுக்கும், மாணிக் தாக்கூருக்கும் இடையே கடும் இழுபறி இருந்தது. ஓரிரு சுற்றுக்களில் மட்டுமே வைகோ முன்னணியில் இருந்தார். மற்ற சுற்றுக்களில் தாகூர் முன்ணியில் இருந்து வந்தார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மிக மிக குறைவாகவே இருந்தது. எனவே கடைசி நேரத்தில் எப்படியும வைகோ.
கடலூரில் கே.எஸ். அழகிரி வெற்றி:
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.
கடலூரில், காங்கிரஸின் அழகிரி, அதிமுகவின் மு.சி.சம்பத், தேமுதிகவின் மு.சி.தாமோதரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் சம்பத்துக்கும், அழகிரிக்கும்தான் மிகக் கடுமையான இழுபறி நிலவியது.
இறுதியில், 23 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றார்.
தற்போது திமுக வசம் இருந்து வரும் இந்தத் தொகுதி அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு போகிறது.
மொத்த வாக்குகள்: 9,85,763
பதிவானவை: 7,48,594
கே.எஸ்.அழகிரி (காங்) - 3,20,473
எம்.சி.சம்பத் (அதிமுக) - 2,96,941
எம்.சி.தாமோதரன் (தேமுதிக) - 93,172
ஆரோக்யதாஸ் (பகுஜன் சமாஜ்) - 8,269
ஆரணியில் காங்கிரஸ் வெற்றி:
ஆரணி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி அபார வெற்றி பெற்றார்.
டாக்டர் ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியனை 1,06,831 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஆரணியில், பதிவான வாக்குகள் விவரம்..
மொத்த ஓட்டுகள் 10,94,824
பதிவானவை 8,39,168
எம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728
முக்கூர் என்.சுப்பிரமணியன் (அதிமுக.) 2,89,897
ஆர்.மோகன் (தேமுதிக) 1,05,721
புதுச்சேரியில் நாராயணசாமி வெற்றி:
புதுச்சேரி தொகுதியை, பாமகவிடமிருந்து கைப்பற்றி விட்டது காங்கிரஸ்.
காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்து வந்தது புதுச்சேரி. கடந்த தேர்தலில் இத்தொகுதியை பாமகவிடம் விட்டுக் கொடுத்தது காங்கிரஸ்.
இந்த முறை, பாமகவை வீழ்த்தி மீண்டும் தன் வசம் கொண்டு வந்து விட்டது காங்கிரஸ்.
இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடப்பு எம்.பி. பேராசிரியர் ராமதாஸை, 85 ஆயிரத்து 772 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்:
மொத்த வாக்குகள்: 7,62,028
பதிவானவை: 6,08,092
நாராயணசாமி (காங்) - 3,00,391
பேராசிரியர் ராமதாஸ் (பாமக) - 2,08,619
ஹசனா (தேமுதிக) -52,638
விஸ்வேஸ்வரன் (பாஜக) -13,442