சிபிஎஸ்இ தேர்வு முடிவு-தமிழகத்தில் 95% தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 95.02 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலத்துக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு, கோவா, டாமன், டையூ ஆகியவை இடம்பிடித்துள்ளன.
இதில் 822 பள்ளிகளை சேர்ந்த சுமார் 54 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 49 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 92.06 சதவீதம் பேர் தேர்ச்சி கண்டுள்ளனர்.
தோல்வியடைந்த மாணவர்களில் 2 ஆயிரத்து 848 பேர் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்கள். இவர்கள் வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்கலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் 5,783 பேர் தேர்வு எழுதி, அதில் 5495 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் 95.02 ஆக இருக்கிறது.
மற்ற தேர்வு முடிவுகளை போல் இதிலும் மாணவிகள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மொத்தம் தேர்வு எழுதிய 2411 மாணவிகளில் 2317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.10 ஆகும். அதே நேரத்தில் 3372 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3178 பேர் வெற்றி கண்டுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.25 ஆகும்.
மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க ரூ. 100 செலுத்தி முதலில் விடைத்தாள்களை வாங்க வேண்டும், பின்னர் அதனுடன் கொடுக்கப்படும் விண்ணபபம் முழுமையாக பூர்த்தி செய்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.