கவனத்தை திசை திருப்பி வன்னியில் இனக் கொலை!
சென்னை: "தமிழகம் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் எந்த சேனலைத் திருப்பினாலும், இணையத்தைத் திறந்தாலும் பிரபாகரன் மரணம் குறித்து, சிங்கள ஆதிக்க வெறியர்கள் தயாரித்துக் கொடுத்த செய்திகளே ஆக்கிரமித்திருக்க, அனைவரது கவனமும் வேடிக்கை மனப்பான்மையில் திளைத்திருக்க, வன்னியிலே ஓசையின்றி ஒரு பெரும் மனித அவலத்தை, இனப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்", என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதிர்ச்சி தகவல் தந்துள்ளன.
"புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், ஆயிரக்கணக்கான உறவுகளைக் கொன்று தமிழின சுத்திகரிப்பை நிலை நிறுத்துவதே ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவு நாடுகளின் விருப்பமாக இருந்துள்ளது.
குறைந்தபட்சம் ஏன் என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல், கொடுக்கிற செய்திகளையெல்லாம் 'ஆ' வென வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டம்தான் தமிழர் கூட்டம் என முடிவுசெய்து, அவர்கள் கதைவிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அரச பயங்கரவாதிகள் வன்னியில் அப்பாவி தமிழர்களை கொன்றழித்து வருவதாக", செவ்வாய் பின்னிரவில் வந்த செய்திகள் கூறுகின்றன.
மிச்சமிருக்கும் மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுதங்களைக் கீழே போடுவதாக அறிவித்தனர் புலிகள். சமாதானம் பேச வந்த மூத்த புலித் தலைவர்கள் சிலரை நயவஞ்சமாகக் கொன்ற ராணுவத்தினர், இப்போது கேட்க நாதியற்ற தமிழர் கூட்டத்தை புலிகள் என்ற சந்தேகத்தில் சுட்டுக் கொல்கிறார்களாம்.
போர் நிறுத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால் இன்னமும் பல ஆயிரம் மக்கள் பதுங்கு குழிகளுக்கு மேலே வரமுடியாமல் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்களாம். அவர்களில் தப்பி மேலே வருபவர்களை புலி என்ற சந்தேகத்தின்பேரில் கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்கிறார்கள் ராணுவத்தினர்.
வன்னியில் ராணுவம் போரை நிறுத்திவிட்டது என்பதே மிகப்பெரிய பொய் என்ற அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த இரு தினங்களும் மக்கள் 'பிரபாகரன் மரணத்தில்' மூழ்கிக் கிடக்க, அங்கே கோரத் தாண்டவம் ஆடியுள்ளது இலங்கை ராணுவம்.
இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை மக்கள் மற்றும் சர்வதேசத்தின் பார்வையிலிருந்து மறைக்கும் பொருட்டே பிரபாகரன் மரணம், உடல் கண்டெடுப்பு, கருணாவை வைத்து அடையாளம் காட்டல் போன்ற மோசடிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.