சர்க்கரை, வெல்லம் விலை உயர்வு-மிளகாய், மல்லி விலை குறைவு
சென்னை: கரும்பு விளைச்சல் குறைந்து விட்டதால் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம், காய்ந்த மிளகாய் எனப்படும் மிளகாய் வத்தல், புளி, மல்லி ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.
மல்லி, புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி, ராமநாதபுரம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் குண்டு மிளகாய் புதிய வத்தல் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.130க்கு விற்றது. தற்போது இது 20 ரூபாய் குறைந்து ரூ. 110 ஆக உள்ளது.
அதுவே பழைய மிளகாய் வத்தலின் விலை கிலோ ரூ. 80 ஆக விற்கிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் மல்லி வந்துகொண்டு இருக்கிறது. எனவே மல்லி விலை கிலோ ரூ. 60 ஆக விற்கிறது. கடந்த மாதம் இது ரூ. 80 ஆக விற்றது.
கர்நாடகா மாநிலத்திலும், தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய பகுதிகளிலும் புளி விளைச்சல் அபரிமிதமாக உள்ளது.
கடந்த மாதம் ரூ. 70க்கு விற்ற புதிய புளி தற்போது ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. பழைய புளியின் விலை ரூ. 50லிருந்து 30 ஆக குறைந்துள்ளது.
கரும்பு உற்பத்தியாளர்கள், மில் உரிமையாளர்கள் பணத்தைத் தர தாமதம் செய்து வருவதால் கரும்பு பயிரிடுவதை விட்டு விட்டு வேறு பயிர்களுக்கு மாறி விட்டனர். நெல், உளுந்து போன்றவற்றுக்கு அவர்கள் மாறியுள்ளனர்.
இதன் காரணமாக கரும்பு விளைச்சல் குறைந்து விட்டது.
வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து இன்னும் சர்க்கரை இறக்குமதி தொடங்கவில்லை.
இது போன்ற காரணங்களால் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 100 கிலோ கொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2,200-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.2,450 ஆக கூடியுள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.23-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.26 ஆக உயர்ந்துவிட்டது.
அதேபோல வெல்லத்தின் விலையும் கூடியுள்ளது. கிலோ ரூ. 32க்கு விற்கிறது. கடந்த மாதம் வெல்லத்தின் விலை ரூ. 25 ஆக இருந்தது.
இதேபோல பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. வட மாநிலங்களைச் சேர்ந்த பெரிய பெரிய வியாபாரிகள் பருப்புகளை வாங்கி இருப்பு வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனராம். இதன் காரணமாக செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு முதல் ரகம் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.64 ஆகவும், பர்மா துவரம் பருப்பு கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.55 ஆகவும், உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.54 ஆகவும், பர்மா உளுத்தம்பருப்பு கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.45 ஆகவும் கூடியுள்ளது.
பாமாயில் விலை குறைந்தது..
அதேசமயம், பாமாயில் விலை குறைந்துள்ளது. தற்போது மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதியாகி வருகிறது.
இதன் காரணமாக கடந்த மாதம் லிட்டர் ரூ. 48க்கு விற்ற பாமாயில் தற்போது 4 ரூபாய் குறைந்து 44 ஆக உள்ளது.
சன் பிளவர் எண்ணெய் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ. 80 விற்றது. இப்போது ரூ. 56 ஆக அதிரடியாக குறைந்துள்ளது.