ஈரானில் 24 நிருபர்கள் கைது-பிபிசி செய்தியாளர் வெளியேற உத்தரவு
கைது செய்யப்பட்டவர்கள் ஒருவர் ஈரான் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர். இன்னொருவர் நியூஸ் வீக் இதழின் கனடா நாட்டு செய்தியாளர் ஆவார். ஒரு பிபிசி செய்தியாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது அரசு.
ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் அதிபர் அகமதிநிஜாத் மீண்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மவுசாவி தோல்வி அடைந்தார்.
ஆனால், முறைகேடுகள் செய்தே அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறி எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளே தூண்டிவிட்டு வருவதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந் நிலையில் சர்வதேச செய்தியாளர்களை வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து பாரீஸைச் சேர்ந்த செய்தியாளர் அமைப்பான பெனாய்ட் ஹெர்வியூ கூறுகையில், ஈரானில் தற்போது பத்திரிக்கை சுதந்திரம் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு பணியாற்றுவது கடினமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளது. இந்த அமைப்புதான் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பல செய்தியாளர்களுடன் தங்களுக்கு தகவல் தொடர்பு அறுந்து போய் விட்டதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படதற்கான உரிய காரணங்களை ஈரான் நிர்வாகம் வெளியிடவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் வென்றதைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மெளசமியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பான செய்திகளைத் தடுக்கும் வகையில் பத்திரிக்கைகள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்காவுக்கு கண்டனம்:
இந் நிலையில் ஈரானில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் அங்கு ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளதற்கு அகமதிநிஜாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
அமெரிக்காவும் மேலை நாடுகளும் எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். எங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை நாங்களே தீர்த்து கொள்வோம்.
வெளிநாட்டினர் தலையிடுவதையும் அத்து மீறலையும் எங்கள் நாட்டில் உள்ள 7 கோடி மக்களும் விரும்பவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.