டெல்லியை உலுக்கிய கன மழை-ஸ்தம்பித்த நகரம்
டெல்லி: நேற்று பிற்பகல் முதல் இரவு வரை வெளுத்துக் கட்டிய கன மழையால் தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துப் போனது. சாலைகள் அனைத்தும் நீரில் மிதந்தன.
டெல்லியில் பருவ மழை மிகத் தாமதமாக வந்துள்ளது. நேற்று திடீரென பிற்பகலுக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. இரவு 9 மணி வரை விடாமல் பெய்த பேய் மழையால் டெல்லி ஸ்தம்பித்துப் போனது.
நகரின் அனைத்துச் சாலைகளிலும் தண்ணீர் வெள்ளமென ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பருவ மழைக் காலத்தி்ல் இதுதான் மிகப் பெரிய மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு வரை 69 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் பெய்த மழையில் 56 சதவீதம் நேற்று ஒரே நாளில் பெய்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் விமானங்கள் தாமதமாகின.
சாலைகளில் வெள்ளம் என மழை நீர் ஓடியதால் வாகனதாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள்தான் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.
அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.
தொடர் மழை காரணமாக நபாஜ்கர் சாலையில், ரஜோரி கார்டன் பின்புறம் உள்ள முக்கியச் சாலை பெரும் பள்ளமாகி விட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சுப்ரமணிய பாரதி மார்க் பகுதியில், இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் வாகனங்களை ஓட்ட முடியவில்லை.
நேற்று நள்ளிரவைத் தாண்டியும் கூட போக்குவரத்து நெரிசல் பல சாலைகளில் சீராகாமல் இருந்தது.
நொய்டாவில் 11 பேர் பலி:
டெல்லியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பேய் மழை பெய்து தீர்த்தது. இதில், நொய்டா 58வது செக்டார் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இன்று காலை இறந்தார்.