ஜோதிடர்கள் சொன்னபடி எனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது - எஸ்.வி.சேகர்
நேற்று எஸ்.வி.சேகரும், அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் நிருபர்களிடம் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவிக்கையில்,
எனக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் எந்த தகராறும் இல்லை. என்னை பொருத்தவரை ஜெயலலிதாவை சந்திக்க 16 முறை அவருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. 17வது முறையாக நான் கடிதம் எழுத விரும்பவில்லை. இந்த வாரத்தில் எனக்கு நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அந்த செய்தி இன்று கிடைத்து விட்டது.
என் மீது எந்த தவறும் இல்லை. நான் அரசியலில் நேர்மையானவன். அங்கு 2-வது மூளையாக செயல்படுபவர்கள் மீது தான் தவறு உள்ளது. அதனால்தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். ஜோதிடம், ஆன்மிகத்தை நம்புகிறவன். எனது ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள், இந்த வாரம் முதல், நல்ல கால கட்டம் தொடங்குகிறது என்று தெரிவித்து உள்ளனர். அந்த வார்த்தைகள் பலித்துவிட்டன. நான் அநாகரீக அரசியலுக்கு எப்போதும் துணை செல்ல மாட்டேன்.
அதிமுகவில் சேர்ந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிதான் நீக்கப்பட்ட இப்போதும் இருக்கிறது. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை. முற்படுத்தப்பட்ட ஜாதி என்ற காரணத்திற்காகவே வாய்ப்பு வழங்கப்படுகிறது. 69 சதவீத இடஓதுக்கீடை கொண்டு வந்தது அதி்முகதான்.
அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வக்கீல் விஜயன் தாக்கப்பட்டார். முற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு தீங்கு செய்தது அதி்முகதான். ஜெயலலிதாவுடன் பழகிய நாட்கள், கட்சியில் இருந்த நாட்கள் மிக மகிழ்ச்சியான நாட்களாகும்.
மற்றவர்களை அனுசரித்து போகும் குணம் எனக்கு இல்லை. அதிமுகதான் எனக்கு கடன்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்காக 6 லட்சம் ரூபாயை செலவு செய்தேன். கட்சியில் இருந்து நீக்கியதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை.
இப்போதுதான் எனக்கு சுயேட்சை எம்எல்ஏ என்ற அங்கீகாரத்துடன் அவையில் முதல் வரிசையில் அமரும் வாய்ப்பும், கூடுதலாக பேசக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குற்றால சாரலை அனுபவிக்க வரும்போது என்னை சுதந்திர பறவையாக்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.
தி்முகவில் சேர்வதில் எந்த தவறும் இல்லை. அதற்காக இப்போதே சேரப் போகிறேன் என்று கூற முடியாது. சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் இடத்தில் என்னால் இருக்க முடியாது.
17 வருடங்களாக மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது கிடையாது. கடந்த லோக்சபா தேர்தலில் கூட அந்த கட்சி வெற்றி பெற்றதற்கு மயிலாப்பூர்தான் காரணமாக இருந்தது.
கட்சியில் இருந்து என்னை நீக்கியதற்கு ஜெயலலிதாவிற்கு நான் நன்றி சொல்கிறேன். அரசியல் அநாகரிகத்திற்கு என்னால் துணை போக முடியாது என்றார் சேகர்.