அர்ச்சர்களிடம் லஞ்சம்-கோவில் ஆணையர் கைது
சேலம்: தவறு செய்த அர்ச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 10,000 லஞ்சம் கேட்ட கோவில் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ராஜகணபதி கோவிலில் சுந்தர், சரவணன், நாகராஜன், ராஜா, விஸ்வநாதன் என, ஐந்து அர்ச்சகர்கள் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர்.
இரண்டு மாதத்துக்கு முன் கோவிலின் கருவறைக்கு உறவினர்களை அழைத்து சென்றதாக அர்ச்சகர் ராஜா மீது புகார் கூறப்பட்டது. அதன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில், ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணையும் நடைபெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில், முறையான உத்தரவு எதுவும் இல்லாமல் இரண்டு பேர் புதிதாக அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அதை எதிர்த்து அர்ச்சகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் புதிய அர்ச்சகர்கள் இருவரையும் கோவில் நிர்வாகம் திரும்ப பெற்றது.
ஆனால் புதிய அர்ச்சர்களை நியமிக்க தடையாக இருந்ததால் பழைய அர்ச்சர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையை கோவில் நிர்வாகம் அவிழ்த்து விட்டதாம்.
போராட்டத்தை காரணம் காட்டி அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் உதவி கமிஷனர் விஜய்குமார் எச்சரிக்கை விடுத்து வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு அர்ச்சர்களை அழைத்த அவர், நடவடிக்கை எடுக்காமல் இருக்க எனக்கு பெரும் தொகை வேண்டும் முதல் கட்டமாக ரூ. 10,000 தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் அர்ச்சகர்களில் ஒருவரான சரவணன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
போலீசாரின் ஆலோசனைப்படி, 10 ஆயிரம் ரூபாயை சரவணன் அய்யந்திருமளிகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள உதவி கமிஷனர் விஜய்குமாரின் வீட்டுக்கு சென்று, நேரில் வழங்கினார்.
ப்போது, பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஜயகுமாரை கைது செய்ய முயன்றனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட விஜயக்குமார் தனது காரில் ஏறி கோவிலுக்குக் கிளம்பினார்.
அவரை போலீஸார் பின் தொடர்ந்தனர். வழியில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார். பின்னர் கோவிலை அடைந்தார். கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள் வேடம் அணிந்து காத்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் இம்முறை விஜயக்குமார் தப்பி விடாமல் லாவகமாக மடக்கிப் பிடித்து விட்டனர்.
விசாரணையில் தனது தவறை ஒத்துக் கொண்டார். இதையடுத்து விஜயக்குமார் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.