திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது-சரத்
நெல்லை: திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என்று ஆலோசனை செய்துவிட்டு போட்டியிடுவது பற்றி அறிவிப்பேன் என்று அசமக தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.
நெல்லையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பழசிராஜா, ஜக்குபாய் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் சமீப காலமாக நடத்தப்படவில்லை. தற்போது 5 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். நாங்கள் பாராளுமன்ற தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொள்கிறோம்.
திருச்செந்தூர் இடைத்தேர்தல் குறித்து எங்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசுவோம். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது. எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும். வியூகங்கள் எப்படி அமைப்பது என்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
சிறப்பான ஆட்சி...
திமுக அரசின் செயல்பாடுகள் மிக சிறப்பாக உள்ளன. முதல்வரைச் சந்தித்தபோது விலைவாசி உயர்வை பற்றி பேசினேன். அதேபோல் தமிழக மீனவர்கள், சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும். கடல் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினேன்.
தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை பார்வையிட்டுள்ளனர். அவர்களை மழை காலத்துக்குள் அவரவர் வாழ்வு இடங்களில் குடியமர்த்த வேண்டும்.
இந்திய அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் 3 லட்சம் தமிழர்களின் வாழ்வு இடங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை விரைவில் சீரமைக்க முடியும். மழை காலம் வந்து விட்டால் அவர்களது நிலை மிகவும் மோசமாகிவிடும் என்றார்.
பின்னர் மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,
5 மாத காலம் நான் எங்கோ சென்று விட்டேன். ஏதோ தோல்வி பயத்தில் ஓடி விட்டான். இனி வரமாட்டான் என்று நினைக்கிறார்கள். கட்சி தொடங்கிய 2 ஆண்டு காலத்தில் 2 தோல்விகள் அடைந்தாலும் அது எல்லாம் சோதனை காலம்தான். பல தோல்விகளை, பல சோதனைகளை சந்தித்தாலும் துவண்டுவிட மாட்டோம்.
ஒரு மனிதன் எந்த அளவு தோல்விகளையும், சோதனைகளையும் சந்திக்கிறானோ அந்த அளவிற்கு வெற்றி நோக்கி அவன் இலக்கு இருக்கும். வெற்றியை மட்டும் கண்டவனை, திடீரென ஒரு தோல்வி சாய்த்து விடும்.
4-ம் தேதி வரை 48 மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க இருக்கிறேன். நான் பதுங்கியோ, ஒதுங்கியோ விடவில்லை என்பதை காட்டத்தான். வெற்றி வியூகம் அமைக்கத்தான் இந்த 5 மாதம் காலம் தேவைப்பட்டது என்பதை புரியவைப்பேன்.
நமது இலக்கு 2011ம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்பதாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளில் வெற்றி என்பதில்லை. நமது உதவியோடு நல்லாட்சி அமைய வேண்டும். அரசியலில் 85 சதவீத மக்களை சந்தித்த ஒரே கட்சி, சமத்துவ மக்கள்கட்சிதான்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்தேன். மக்கள் எனக்களித்த நம்பிக்கை இனி வெற்றி என்ற நம்பிக்கையை தந்து இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி என்னை மாற்று அணியில் இருந்தாலும், மிகச்சிறந்த பண்பாளர் என்று கூறினார். அவரை அப்பா என்றுதான் அழைக்கிறேன். துரோணாச்சாரியார் போல் நான் அவர் அருகில் இருந்தும், அவரை பார்த்தும் அரசியல் பாடம் கற்றுக் கொண்டேன்.
எதிர்க்கட்சியோ, எதிராளியோ நமது பண்பை போற்றும் அளவிற்கு நாம் பெயர் எடுக்க வேண்டும் என்றார்.