வெள்ளம் - தாமிரபரணி கரையோர மக்கள் வெளியேற உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.
அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, விகேபுதூர், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழைக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் இடி, மின்னல் தாக்கியதில் தேவர்குளம் குமார், முத்தம்மாள்புரம் சின்னதாய், வேலாயுதபுரம் ஈஸ்வரன், மங்களபுரம் பனையடியான், ஆலங்குளம் செல்வராஜ் ஆகியோர் இறந்தனர்.
நேற்று முன்தினம் ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த மயாண்டி நல்லூர் அறவன்குடியிருப்பில் பால் கறந்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அங்கு வழியில் தொங்கி கொண்டிருந்த மின் கம்பி தெரியாமல் மாயாண்டி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலயே அவர் பலியானார்.
இதனால் நெல்லை, தூத்துக்குடியில், தொடர் மழைக்கு பலியானோர் எண்ணி்க்கை 6 ஆக உயர்ந்தது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்வதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஜெயராமன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மழை நிலவரம், குளங்களை கண்காணி்க்க வருவாய் துறையினர் 24 மணி நேரமும், உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ள நிலைமையை கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிலவரங்கள் குறித்து 1077 என்ற இலவச தொலைபேசியில் பொதுமக்கள், விவசாயிகளா தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாபநாசம் நீர்மட்டம் 10 அடி உயர்வு
தொடர்மழை காரணமாக ஓரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 10 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் சுமார் 21 அடியும் உயர்ந்துள்ளது.
விக்கிரமாசிங்கபுரம், பாபநாசம், சேர்வலார், மற்றும் கரையார் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் 67.60 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 10 அடி உயர்ந்து 77.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7456.46 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. பாபநாசம் அணையில் 83 மிமீ மழையும், கீழணையில் 80 மிமீ அளவிலும் மழை பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் 77.26 அடியாக இருந்த சேர்வலார் அணையின் நீர்மட்டம் ஓரே நாளில் சுமார் 21 அடியாக உயர்ந்து 98.09 அடியாக இருந்தது. இந்த அணை பகுதியில் 36 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக கரையார் பாண தீர்த்த அருவிக்கு தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கரையார் அணையில் படகு போ்க்குவரத்து நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.