அதிபர் தேர்தல் இப்போதைக்கு இல்லை-ராஜபக்சே அறிவிப்பு
கொழும்பு: அதிபர் தேர்தல் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என ராஜபக்சே அறிவித்து விட்டார். பொன்சேகா பீதி காரணமாகவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது.
அதிபர் தேர்தலை சற்று தள்ளிவைத்து விட்டு அதற்கு இடைப்பட்ட காலத்தில் பொன்சேகாவின் பெயரை பெரிய அளவுக்கு டேமேஜாக்க அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலை ராஜபக்சே முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து இலங்கையில் தேர்தலுக்கான ஆயத்தங்களில் அனைத்துக் கட்சியினரும் இறங்கினர். எதிர்க்கட்சியினர் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு வசதியாகவே தனது கூட்டுப் படைத் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார் பொன்சேகா என்றும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் கட்சி முடிவெடுக்கும் எனக் கூறி விட்டார் ராஜபக்சே.
நேற்று மாலை ஹெத்தாராம விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இலங்கை சுதந்திரா கட்சியின் 58 வது வருட பொது மாநாட்டில் ராஜபக்சே பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், அதிபர் தேர்தலா, நாடாளுமன்றத் தேர்தலா, எதை முதலில் நடத்துவது என்பது குறித்து நான் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதை கட்சியின் முடிவுக்கு விட்டு விடுகிறேன். கட்சியே முடிவு செய்து இதை அறிவிக்கட்டும்.
பொது வேட்பாளர் ஒருவரை கூட தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறது ஐக்கிய தேசிய கட்சி. இப்படிப்பட்ட கட்சியால் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை ஆட்சி செய்ய முடியும். நாட்டை ஆட்சி செய்யக் கூடிய சக்தி ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை.
ஜனாதிபதி வேட்பாளருக்காக எதிர்க்கட்சியினர் பிச்சை எடுக்கிறார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். மறைந்த நமது தலைவர்கள் யாருக்கும் பயந்து கொண்டு தீர்மானங்களை எடுக்கவில்லை. நானும் அப்படித்தான் சர்வதேச அழுத்தங்களுக்கு நான் என்றும் பயப்படபோவதில்லை.
இன்று நாட்டிலிருப்பது அரசியல் எதிர்க்கட்சியல்ல. நாட்டிற்கு எதிரான எதிர்க்கட்சி. ஜனநாயகத்துக்காக, மக்களுக்காக பாடுபடக்கூடிய எதிர்க்கட்சியினர் நாட்டிற்கு தேவை. நாட்டை காட்டி கொடுப்பவர்கள் நமக்கு வேண்டாம்.
நாம் எந்த சவாலையும் முறியடிக்க காத்திருக்கிறோம். நாட்டின் எதிர்காலமே நமக்கு தேவை என்றார் ராஜபக்சே.