இனி தொலைபேசி கட்டணத்தை தபால்காரரிடமே செலுத்தலாம்
சென்னை: இனி வீட்டில் இருந்தபடியே தொலைபேசி கட்டணத்தை தபால்காரர் மூலம் செலுத்தலாம். இந்த புதிய முறை முதல் கட்டமாக சென்னையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் தொலைபேசி சந்தாதாரர்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரர்களிடமே தொலைபேசி கட்டணத்தை காசோலையாக செலுத்தலாம்.
இதற்கு சேவைக் கட்டணமாக பில் தொகையுடன் ரூ.10 மட்டும் வசூலிக்கப்படும்.
பில் கட்டணத்துடன் இந்த 10 ரூபாயையும் சேர்த்து காசோலையாக (செக்) அளிக்க வேண்டும்.
காசோலையை அந்தப் பகுதிக்கு உள்பட்ட அஞ்சல் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டர் பெயரில் தரலாம். (போஸ்ட் மாஸ்டர் என்று எழுதினால் போதும், அவரது பெயருக்கு செக் எழுத வேண்டியதில்லை)
காசோலையுடன் தொலைபேசி பில்லையும் சேர்த்து தபால்காரர்களிடம் வழங்க வேண்டும். அதைப் பெற்றுக் கொண்டு அவர் தாற்காலிக ரசீது ஒன்றை அளிப்பார்.
பின்னர் தொலைபேசி பில்லும், தொகையும் சரிபார்க்கப்பட்ட பின்னர் தலைமை அஞ்சலகம் கட்டணத்துக்கான முறையான ரசீதை தபால்காரர் மூலமே அளிக்கும்.
அதை தபால்காரர் வாடிக்கையாளர்களிடம் வழங்கிவிட்டு, தான் ஏற்கெனவே வழங்கிய தாற்காலிக ரசீதை திரும்பப் பெற்றுக் கொள்வார்.
இந்த புதிய நடைமுறை சென்னை நகர அஞ்சல் வட்டாரங்களில் உள்ள தலைமை மற்றும் துணை நிலை அஞ்சல் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.