லண்டனில் கொலையான வாலிபர் உடல் தமிழகம் வந்தது: இந்திய அரசு உதவவில்லை
நாமக்கல்லைச் சேர்ந்தவர் 23 வயதான சரவணக்குமார். லண்டனில் எம்.பி.ஏ படித்து வந்தார். படிப்புச் செலவுக்காக பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். தீபாவளி தினத்தன்று இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது உடலை மீட்க உதவ வேண்டும் என தமிழக அரசுக்கு சரவணக்குமாரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் லண்டனைச் சேர்ந்த உலகத் தமிழ் கழகம் சரவணக்குமாரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்காக நிதி திரட்டியது. தேவையான நிதி சேர்ந்ததைத் தொடர்ந்து சரவணக்குமாரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு செல்லும் பணிகளை முடுக்கி விட்டது உலகத் தமிழ் கழகம்.
இதையடுத்து நேற்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சரவணக்குமாரின் உடல் கோவை கொண்டு வரப்பட்டது. உலகத் தமிழ் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஜேக்கப் ரவிபாலன் உடன் வந்தார்.
கோவை விமான நிலையத்தில் ரவிபாலன் நடந்தது என்ன என்பது குறித்துக் கூறுகையில், சரவணக்குமார், கிரையோடன் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி தினத்தன்று அவர் வைத்திருந்த பிளாக்பெர்ரி செல்போனை அவருடன் பணியாற்றிய சிலர் கேட்டுள்ளனர். ஆனால் சரவணக்குமார் தர மறுத்துள்ளார். இதையடுத்து நடந்த மோதலில் சரவணக்குமாரை, அந்தப் பணியாளர்கள் தாக்கியுள்ளனர். இதில் சரவணக்குமார் உயிரிழந்தார்.
இந்திய அரசு உதவவில்லை...
கோவை விமான நிலையத்தில் ரவிபாலன் நடந்தது என்ன என்பது குறித்துக் கூறுகையில், சரவணக்குமார், கிரையோடன் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி தினத்தன்று அவர் வைத்திருந்த பிளாக்பெர்ரி செல்போனை அவருடன் பணியாற்றிய சிலர் கேட்டுள்ளனர். ஆனால் சரவணக்குமார் தர மறுத்துள்ளார். இதையடுத்து நடந்த மோதலில் சரவணக்குமாரை, அந்தப் பணியாளர்கள் தாக்கியுள்ளனர். இதில் சரவணக்குமார் உயிரிழந்தார்.
ரூ. 500 மட்டுமே கொடுக்க முன்வந்த தூதரகம் ..
சரவணக்குமாரின் உடலை நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்க உதவுமாறு இந்திய அரசையும், இங்கிலாந்து அரசையும் பலமுறை கோரினோம். பல்வேறு மனுக்களை அளித்தோம். ஆனால் இரு அரசுகளும் எந்தவித உதவியையும் செய்யவில்லை.
நாங்கள் அக்டோபர் 28ம் தேதி இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவி கோரியபோது அவர்கள் அளித்த பதில் எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்திய குடியரசுத் தலைவர் வருவதால் எங்களால் உடனடியாக எந்த உதவியையும் செய்ய முடியாது என்று தூதரக அதிகாரிகள் கூறி விட்டனர். அடுத்து அவர்கள் கூறியதுதான் மிகக் கேவலமானது, எங்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.
சரவணக்குமாரின் குடும்பத்தினர் எங்களுக்கு உதவி கோரி மனு அனுப்பினால் நாங்கள் ரூ. 500 பணம் தருகிறோம். எங்களிடம் வேறு நிதி இல்லை என்று கூறி விட்டனர்.
இதற்கு மேலும் இந்தியத் தூதரகத்தை நம்ப முடியாது என்பதால் நாங்கள் தாராள மனம் படைத்தவர்களின் உதவியை நாட முடிவு செய்தோம். இதன் மூலம் 8000 பவுண்ட் பணத்தைத் திரட்ட முடிந்தது. இதற்கு எங்களுக்கு 45 நாட்கள் தேவைப்பட்டது. அதன் பின்னரே சரவணக்குமாரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடிந்தது.
இந்தியத் தூதரகத்தின் செயல் மிகவும் மோசமானது. இதுவே பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அவர்களின் உடல்களை இலவசமாகவே அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப அந்நாட்டு தூதரகங்கள் நடவடிக்கை எடுக்கின்றன.
ஆனால் இந்தியத் தூதரகம் நடந்து கொண்ட விதம் பெருத்த ஏமாற்றததையும், அவமானத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தனது நாட்டின் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடலைக் கூட கொண்டு வர இந்தியத் தூதரகம் உதவாதது வெட்க்கேடானது என்றார் ரவிபாலன்.
இந்திய தூதரகம் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட விதம் குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. உடலை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கனிமொழி கூறியிருந்தார். என்ன மாதிரியான நடவடிக்கைள் எடுக்கப்பட்டன் என்றும் புரியவில்லை.
ஒரு வேளை தமிழக அரசு, மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுத்திருந்தால், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இவ்வளவு கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.