ஓமந்தூருக்கு அப்போதே மண்டபம் கட்டியிருக்கலாமே?- ஜெ.வுக்கு பரிதி கேள்வி
சென்னை: ஓமந்தூரார் மணிமண்டபத்தை அதிமுக ஆட்சியிலேயே கட்டியிருக்கலாமே என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த தியாகிகளுக்கு உரிய மரியாதை செய்யும் ஒரே இயக்கும் திமுக தான் என கடந்த 7ம் தேதி விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
மேலும், சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அவரின் சொந்த ஊரான ஓமந்தூர் கிராமத்தில் மணி மண்டபம் அமைப்பது குறித்தும் கருணாநிதி அறிவித்தார்.
இதனால் வெகுண்டெழுந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஓமந்தூரார் மணி மண்டபத்து நிலம் ஒதுக்கியது எனது ஆட்சியில் தான்' என்று கூறி, ஏராளமான தியாகிகளுக்கு அதிமுக செய்த மரியாதை குறித்த நீண்ட பட்டியலை வெளியிட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக செய்தி மற்றும் தகவல் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அதில், 'ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் தலைவர் கருணாநிதி தியாக சீலர்களுக்கு, விடுதலை போராட்ட வீரர்களுக்கு, தமிழ் சான்றோர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதும், அவற்றைப் போற்றிப் பாதுகாப்பதும் தனது தலையாய கடமையெனக் கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
விழுப்புரத்தில் நடந்த விழாவில் சிவராஜ் எம்எல்ஏ வைத்த கோரிக்கையினை மேடையிலே ஏற்றுக்கொண்டு, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதிலே என்ன தவறு உள்ளது? இதைக் கூட ஜெயலலிதாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
2004ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோதே ஓமந்தூராருக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கி விட்டதாக பெருமைபட்டுக் கொண்டுள்ளார்.
உண்மையிலேயே ஜெயலலிதாவிற்கு ஓமந்தூரார் மீது அக்கறை இருக்குமேயானால் 2004ம் ஆண்டு நிலம் ஒதுக்கிய பிறகு, 2 ஆண்டு காலம் அவர் தானே ஆட்சியிலே இருந்தார்.
அந்த காலத்திலேயே ஓமந்தூராருக்கு மணிமண்டபத்தைக் கட்டி திறந்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் செய்யவில்லை. அதைச் செய்யாதபோது, அதைப் பற்றி அறிக்கை விட இப்போது அவருக்கு என்ன தகுதி? அவரது அறிக்கையினை நம்புவதற்கு தமிழகத்திலே யாருமே இல்லை.
கோரிக்கை எதுவும் இல்லாத நேரத்திலேயே சென்னையில் அரசினர் தோட்டத்திற்கு ஓமந்தூராரின் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தியவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதா தான் அதை மக்களிடமிருந்து மறைத்து விடலாம் என்ற நோக்கத்தோடு அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது ஆட்சி காலத்திலே ஓரிருவருக்கு அவர் சலுகைகள் செய்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தமிழகத்திலே தியாகத்தையும், தியாகிகளையும் மதிக்கக்கூடியவர் கருணாநிதி என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவகத்தை தனது அரசு அமைத்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தியின் நினைவகத்தை மத்திய அரசு தான் அமைத்தது.
கட்டி முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தைக் கூட திறக்க மனமில்லாமல் இரண்டாண்டுகளுக்கு மேல் வைத்திருந்த நிலையில் கழக ஆட்சி அமைந்த பிறகு தான் அது திறந்து வைக்கப்பட்டது.
உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் தோன்றிய தலைவர்களுக்கும், நினைவுச் சின்னங்களை அமைத்து எதிர்காலத் தலைமுறை அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக, வாழ்நாளெல்லாம் தனது எழுத்தின் மூலமாக பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும், தலைவரின் இமாலயப் பணிகளை இட்லிக்குள் மறைத்துவிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா' என்று கூறியுள்ளார்.