கருணாநிதிக்கு இடைத்தேர்தலை விட மாநாடு முக்கியம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலைவிட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் செயல்படுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவையில் நடைபெற இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான செய்திகளை சிறப்பாக வெளியிட வேண்டும் என்ற வகையில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பத்திரிகை அதிபர்கள், ஆசிரியர்கள், தொலைக்காட்சி, ரேடியோ போன்ற மீடியாக்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோரைக் கொண்ட கலந்துரையாடல் விருந்துக்கு இந்து' என்.ராம் நேற்று ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அங்குள்ள செய்திகளை அறிந்து நம் முதல்-அமைச்சர் கலைஞரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் நேரத்தில் எப்படி இங்கு வருவது என்று யோசித்தேன்.
ஆனால், 10 நிமிடமாவது வந்துவிட்டு செல்லுங்கள் என அமைச்சர் பரிதி இளம்வழுதியும், பீட்டர் அல்போன்சும் அன்போடு கட்டளையிட்டனர்.
நான் இன்று காலையில் முதல்-அமைச்சர் கலைஞரிடம் இப்படியொரு நிகழ்ச்சி இருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன்' முதல்-அமைச்சரோ எவ்வித தயக்கமும் இன்றி உடனே நீ அங்கு கண்டிப்பாக சென்று உங்களையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
நம் முதல்-அமைச்சர் கலைஞர், இடைத்தேர்தலைவிட உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்று கருதுபவர். அந்த வகையில் தான் உடனடியாக நான் இந்தக் கூட்டத்துக்கு வர அனுமதி கொடுத்தார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துள்ளார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
இந்த மாநாடு வெற்றிகரமாக அமைய பத்திரிகை அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிக மிக அதிகமாக தேவை.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் அன்னியமொழி பேசும் அனைவருக்கும் இந்த மாநாடு பற்றிய செய்திகளை எடுத்துச் சொல்லும் ஆற்றல் உள்ள உங்கள் அனைவரையும் அழைத்து நாம் கருத்துக்களை பரிமாறிகொள்ளும் வகையில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டுக்கு மகுடம் சூட்டும் வகையில் உங்கள் பணிகள் அமைய வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அரசு சார்பில் எந்தெந்த வகைகளில் உங்களுக்குத் துணை நிற்கவேண்டுமோ அந்த வகையில் அரசும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறது' என்றார்.
நிகழ்ச்சியில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ, செய்தி மற்றும் தகவல் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தூர்தர்ஷன் இயக்குனர் மாரியப்பன், அகில இந்திய வானொலி இயக்குனர் சீனிவாச ராகவன் கலந்துகொண்டனர்.
மேலும், தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், தினமலர் துணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், இந்து பத்திரிகை சார்பில் ரமேஷ் ரெங்கராஜன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ் சந்தோலியா, டெக்கான் கிரானிக்கல் பகவான் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனந்தவிகடன் சார்பில் திருமாவேலன், குமுதம் ஜவஹர் பழனியப்பன், நக்கீரன் கோபால், ராஜ் டிவி ராஜேந்திரன், மக்கள் தொலைக்காட்சி முருகன், மெகா டிவி ஜெயந்தி தங்கபாலு உள்பட பல்வேறு மீடியா துறையினரும் கலந்துகொண்டார்கள்.