தமிழகத்தில் மட்டும் திட்டமிட்டபடி ஏப்ரல் 5-ம் தேதி லாரி ஸ்டிரைக்!
டீசல் விலையை குறைக்க வேண்டும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு வசூலிக்கப்படும் தேசிய அனுமதிக்கான கட்டணத்தை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக குறைக்க வேண்டும், சுங்க வரியை முறைப்படுத்துதல், இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கான வரியை நீக்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 5-ந் தேதி முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து இருந்தது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக உயர் அதிகாரிகளும், லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளும் டெல்லியில் நேற்று தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையில், வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு வசூலிக்கப்படும் தேசிய அனுமதிக்கான கட்டணத்தை 11/2 லட்சம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக வருகிற மே 1-ந் தேதி முதல் குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
சீரான சுங்கவரி வசூலிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டி இருப்பதால் அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கான வரியை நீக்குவது பற்றி மத்திய வர்த்தக அமைச்சகத்துடன் பேசி தீர்வு காண்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அதன் இயக்குனர் ஆனந்த் பிரகாஷ் எழுத்துபூர்வமாக தெரிவித்து இருந்தார்.
கோரிக்கைகளில் முக்கியமானவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து, ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தள்ளி வைக்க அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் மட்டும்....
ஆனால் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தள்ளி வைத்தாலும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி கூறினார்.
ஓட்டுனர் உரிமம் வழங்க 8-ம் வகுப்பு கல்வி அவசியம் என விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, விபத்து காலங்களில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை தளர்த்துவது, வழிப்பறி கொள்ளை தொடர்பான லாரி உரிமையாளர்களின் புகார் மீது நடவடிக்கை, மெக்கானிக்கல் வரியை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.