திருப்பூர், கரூரில் பந்துக்கு முழு ஆதரவு-அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
விலைவாசியை குறைக்கக் கோரி இன்று நாடு முழுவதும் பாஜக தவிர்த்த பிற எதிர்க் கட்சிகள் பந்த் நடத்தின.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் மதிமுக, இடதுசாரிகள் ஆதரவுடன் இந்த பந்த் நடந்தது.
இந் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் திடீரென அதிமுக தொண்டர் மஸ்தான் என்பவர் விலைவாசியை குறைக்கக் கோரி முழுக்கமிட்டபடியே தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமக்கப்பட்டுள்ளார்.
கரூரில் பந்துக்கு முழு ஆதரவு-நகரமே 'வெறிச்'
இந் நிலையில் தொழில் நகரமான கரூரில் பந்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
மின் வெட்டு காரணமாக தொழிதிபர்களும், தொழிலாளர்களும், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆளும் கட்சியின் மீது உள்ள வெறுப்பில் பந்த்துக்கு மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
கரூரில் காலை 8 மணி முதலே கடைகள் மூடி கிடந்தன. திறந்திருந்த ஒரு சில கடைகளையும் அடைக்கச் சொல்லி அதிமுக மாவட்டச் செயலாளரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் வலம் வந்தார்.
அதே நேரத்தில் பாதி மூடிய நிலையில் இருந்த கடைகளை முழுவதுமாக திறந்து வைக்க கோரி திமுக மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஒரு குரூப் அணி வகுத்து வந்தது.
இந்தச் சண்டையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்று பயநது பாதி திறந்திருந்த கடைகளையும் முழுவதுமாக மூடிவிட்டுச் சென்றுவிட்டனர் கடைக்காரர்கள்.
அதே போல இடதுசாரிகள் சங்க தொழிலாளர்கள் அதிகம் உள்ள கரூர் வேலாயுதம்பாளையத்தில் விசைத்தறிக் கூடங்கள் பணி செய்ய ஆட்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
மேலும், அரசு அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர் தாலுகா அலுவலகம் என பல அலுவலங்களில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர், கோபி, காங்கேயம், தாராபுரத்தில்...
அதே போல திருப்பூரில் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும் கோபி, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நெல்லை மாவட்டத்தில்..
நெல்லை மாவட்டத்தில் 25 சதவீத பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.
மேலும் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இயல்பு நிலை பாதிப்பு:
காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது. அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை முழுமையாக மூடப்பட்டன.
சாலைப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள எல்லையில் பஸ்-லாரிகள் நிறுத்தம்:
கேரளத்தின் பாதிப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் முழு அடைப்பு தீவிரமாக இருந்ததால் தமிழகத்தில் இருந்து சென்ற பஸ், லாரிகள் எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
பொள்ளாச்சி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கோவையில் இருந்து செல்லும் பேருந்துகள் வாளையாறில் நிறுத்தி வைக்கப்பட்டன. குமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பால் முகவர்கள் சங்கம் ஆதரவு:
இந்த பந்துக்கு பால் முகவர்கள் சங்கமும் ஆதரவு அளித்தது.
இதனால் இந்த சங்கத்தை சேர்ந்தவர்களின் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் மூடப்பட்டிருந்தன.