கருணாநிதி என்னிடம் சொன்ன ரகசியம்!!: வைகோ
அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் நடந்த மதிமுக திறந்தவெளி மாநாட்டில் அவர் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலோடு திமுகவின் சரித்திரம் முடிந்தது. அரசு அதிகாரத்தை வைத்துக்கொண்டு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் போடும் ஆட்டம் கொஞ் சநஞ்சமல்ல.
கொலை, கொள்ளை, ஊழல்களை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வரும் தேர்தலில் எங்கள் கட்சி மட்டுமல்ல. எங்கள் கூட்டணியின் பிரச்சாரமே கருணாநிதியின் குடும்பமும் ஜனநாயகமும் என்ற தலைப்பில்தான் அமைந்திருக்கும். அப்படித்தான் பிரச்சாரம் செய்ய போகிறோம்.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் தமிழகம் பாலைவனமாக போகிறது. மக்களை சுரண்டும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழிக்க போகும் போர்வாளாக மதிமுக தொண்டர்கள் இருப்பார்கள்.
அண்ணா காலத்து திமுகதான் தமிழகத்திலிருந்து இந்தியை துரத்தியடிக்க போராட்டம் செய்தது, இந்தி எதிர்ப்புப் போராட்டமே திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. தமிழ் தமிழ் என்று திமுக மேடை தோறும் முழங்கியது.
ஆனால், திமுக பிரமுகரின் மகன் ஒருவர் தான் இந்தியாவின் ரூபாய் நோட்டுக்கான சின்னத்தை வரைந்து தந்துள்ளார். அதுவும் திராவிட மேடைகளில் எதிர்க்கப்பட்ட, திமுகவால் துரத்தப்பட்ட தேவநாகரி மொழியில் அந்த சின்னத்தை உருவாக்கித் தந்துள்ளார்.
எவ்வளவு பெரிய அநியாயம்?. அந்த இளைஞனுக்கு கருணாநிதி பொன்னாடை போர்த்தி அவரைப்பற்றி முரசொலியில் கட்டுரை எழுதுகிறார். இது எவ்வளவு பெரிய துரோகம்.
கருணாநிதி இந்தியை தமிழகத்தில் நுழைக்க முயற்சி செய்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
திமுகவை அண்ணா தொடங்கியபோது பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகிய வற்றை காப்பதே இயக்கத்தின் நோக்கம் என்று சூளுரைத்தார். இன்று அவற்றை காப்பதற்காக மதிமுக போராடி வருகிறது.
இதுவரை உங்களுக்கு தெரியாத, சொல்லாத ரகசியத்தை தற்போது உங்களிடம் கூறுகிறேன். இது கருணாநிதியே என்னிடம் சொன்னது.
பொடா சட்டத்தின் கீழ் நான் வேலூர் சிறையில் இருந்தபோது என்னை வந்து சந்தித்தார் கருணாநிதி. அப்போது சிறையிலிருந்து வெளியே வா என்று நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து என்னிடம் கோரிக்கை விடுத்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரிடம் சீட் பற்றி கேட்க சென்றிருந்தேன்.
என்னுடன் சிறையிலிருந்த கணேசமூர்த்திக்காக ஒரு தொகுதியைக் கேட்டேன். முடியாது என்றவரிடம் எனக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை. என்னுடன் இருந்த அவருக்கு தந்தால் தான் சிறப்பாகயிருக்கும் என வாதாடினேன். அவர் முடியாது எனச் சொல்லிவிட்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தவர் என்னிடம், என் மறைவுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. அதன் பின் அதிமுகவும் நீயும் தான் என்றார்.
நான் அப்படியெல்லாம் சொல்லாதீங்க தலைவரே, நீங்க 100 ஆண்டுகள் வாழ்வீர்கள் என்றேன்.இப்போதும் சொல்கிறேன் நீங்கள் வாழ்வீர்கள். உங்கள் கண் முன்னாலேயே உங்களது குடும்பம் சிதறி சின்னாபின்னமாவதை நீங்கள் காண்பீர்கள்.
வரும் தேர்தலுக்கு பின் திமுக இருக்காது. நீங்கள் சொன்னது போல அதிமுகவும், மதிமுகவும் தான் இருக்கும் என்றார் வைகோ.