அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டப்படும்-தொகாடியா
டெல்லி : அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அங்கு ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். சர்ச்சைக்குரிய அந்த இடம், ராமர் பிறந்த இடம் தான் என்று மூன்று நீதிபதிகளும் ஏகமனதாகத் தீர்ப்பில் உறுதி செய்துள்ளனர். இந்துக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து உயர் நீதிமன்றம் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இந்த நிலத்துக்காக கடந்த 450 ஆண்டுகளில் நம் முன்னோர்களில் சுமார் 4 லட்சம் பேர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களது தியாகத்தை இப்போது நினைவுகூர வேண்டும். இதற்காக சாதுக்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தீர்ப்பு கடவுள் ராமருக்கே கிடைத்த வெற்றி. உலகம் முழுவதும் உள்ள 100 கோடி இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி. நீதித்துறை மீது இந்துக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அயோத்தியில் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட இடம், ராமர் பிறந்த இடம்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள இடத்தில் ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டப்படும்.
இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஆதரவளிக்க வேண்டும். இதுவரை நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் என்றார்.
ராமர் தான் தேசிய புருஷன்-உமா பாரதி:
ராமர் தான் தேசிய புருஷன் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான உமா பாரதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ராமர் சிலை உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்ற உண்மைக்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு எல்.கே.அத்வானியும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ராமர் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்தார். பாபர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தார். ராமர் தான் தேசிய புருஷன் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்றார்.
முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவோம்-பால் தாக்கரே:
இந்தத் தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறுகையில், அயோத்தி பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
பல்லாண்டு காலமாக அயோத்தி பிரச்சினை நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. இந்தத் தீர்ப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவோம் என்றார்.
ஹரியாணாவில் விஎச்பி வெற்றி பேரணி:
இந் நிலையில் ஹரியாணா மாநிலம் பிவானி பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வெற்றிப் பேரணி நடத்தினர்.
நகரின் பிரதான தெருக்கள், மார்க்கெட் வழியாக, கைகளில் காவி கொடியை ஏந்தியவாறு, பேரணியாக சென்ற அவர்கள் இந்துக்களுக்கு நீதி கிடைத்துவிட்டது என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதில் பாஜக உள்ளிட பல இந்து அமைப்பினரும் கலந்து கொண்டனர்.