30 மணி நேரம் பொதுமக்களுடன் ரயிலில் பயணித்த ராகுல்
மக்களுடன் மக்களாக இருக்க விரும்புவராக மாறி வருகிறார் ராகுல் காந்தி. மும்பைக்கு முன்பு வந்தபோது திடீரென மின்சார ரயிலில் ஏறி அசத்தினார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் எந்த வித அறிவிப்பும் இன்றி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறைக்கே தெரியாதாம்.
பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும் ராகுல் திடீர் என்று பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி மக்களுடன் உரையாடுவார். காரில் சென்று கொண்டிருக்கும்போது வழியில் விவசாயிகளைக் கண்டால் கீழே இறங்கி அவர்களுடன் பேசுவார்.
கடந்த 18-ம் தேதி ராகுல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோரக்பூர் வந்தார். அங்கிருந்து பொதுமக்களுடன் ரயிலில் பயணம் செய்ய விரும்பினார். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் மும்பை செல்லும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். 2-ம் வகுப்பில் பயணிகளுடன் பயணியாக மக்கள் குறைகளைக் கேட்டுக் கொண்டே பயணித்தார்.
திடீர் என்று ராகுல் தங்களுடன் 30 மணி நேரம் பயணம் செய்ததில் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.