குண்டு பணிப்பெண்ணை நீக்கியது செல்லாது... ஏர் இந்தியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த நீபா தார் பணிபுரிந்து வந்தார். இவர் உடல் குண்டாக இருந்ததால் விமானப் பணிப் பெண் வேலைக்கு தகுதி இல்லை என்று கூறி அவரை ஏர் இந்தியா நிறுவனம் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து நீபா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் பிரதாப்குமார், எம்.கே. சின்கா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, நீபாவுக்கு 2 மாதத்தில் வேலை வழங்க உத்தரவிட்டது. அவர் குண்டாக இருப்பதை காரணம் காட்டி வேலை நீக்கம் செய்தது செல்லாது அவரது உடல் நிலையை அறிய மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டும், என்று தீர்ப்பு கூறினார்கள்.
2001-ல் வேலை நீக்கம் செய்யப்பட்ட நாள் முதல் அவருக்கு சேர வேண்டிய சம்பளத் தொகை முழுவதையும் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.