மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு வேண்டாம்: பிரதமருக்கு தங்கபாலு கடிதம்
சென்னை: மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கே.வி. தங்கபாலு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வர இந்திய மருத்து குழுமத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த பொது நுழைவுத் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் மலைவாழ் இன மாணவர்கள் அதிலும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீடு முறை முழுமையாக நிறைவேற்ற இது தடையாக இருக்கும்.
ஆகையால் இடஒதுக்கீடு முறை வெற்றியடைய ஒவ்வொரு மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் மலைவாழ் மாணவ - மாணவியரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை அவர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தனித்தனியே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கும் முறையை உடனே ரத்து செய்ய வேணடும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கின்றேன் என்று அதில் கூறப்படிருந்தது.