2ஜி விவகாரம்-பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தயார்-பிரதமர்

டெல்லி காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சிகளை அவர் விமர்சித்துப் பேசினார்.
பிரதமர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மறைக்க எதுவும் இல்லை. எல்லாமே தெளிவாக உள்ளது. நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதன் விசாரணை நடுநிலையுடன் கூடியது. அந்த குழு விசாரணையின்போது நான் நேரில் ஆஜராக விரும்புகிறேன், தயாராகவும் இருக்கிறேன்.
இதுதொடர்பாக நான் பொதுக் கணக்குக் குழுத் தலைவருக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன். அவர் என்னை ஆஜராக அனுமதித்தால் ஆஜராவேன். பிரதமர் என்பவர் சீசரின் மனைவி போல. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதை நான் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க விரும்புகிறேன்.
ஆனால் ஜேபிசி விசாரணையை அரசு மறுக்கிறது என்று தவறான, பொய்யான பிரசாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளது பாஜக.
தவறு செய்த யாரும் தப்ப அனுமதிக்கப்பட மாட்டார். நிச்சயம் உரிய விசாரணைக்குப் பின்னர் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதை நாங்கள் பார்க்க மாட்டோம்.
இந்த விவகாரத்தில் ஜேபிசி விசாரணை தேவையற்றது என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த விசாரணையால் எந்த பலனும் இருக்காது என்பதே உண்மை.
ஊழலை ஒழிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஐந்து அம்சத் திட்டத்தை வகுத்துள்ளார். இதை கவனமுடன் கடைப்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஊழல் புகார்களை காங்கிரஸ் மீதும், அரசு மீதும் மட்டுமே சுமத்தி வருகின்றனர். எங்களை அனைவரும் அக்குவேறாக ஆராய்ந்து பார்க்க விரும்புகின்றனர். மேலும் நாங்கள் மட்டுமே ஊழல் செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இதேபோன்ற புகார்கள் எங்களது முதல்வர்கள் மீது எழுந்தபோது நாங்கள் உடனடியாக அவர்களை பதவி விலக உத்தரவிட்டோம். அவர்களும் விலகினர். சாதாரண சந்தேகத்தின் பேரில் மட்டுமே அவர்கள் விலகினர். இன்னும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படக் கூட இல்லை. ஆனால் சில எதிர்க்கட்சிகள் தங்களது ஊழல் கறை படிந்த முதல்வர்களை பதவியில் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கின்றன.












Click it and Unblock the Notifications