2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-வாஜ்பாய் ஆட்சியில் ஏற்பட்ட உண்மையான இழப்பு ரூ 1.43 லட்சம் கோடி-சிபல்
ராஜா பதவிக்காலத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறியுள்ள நிலையில் தற்போது அதற்குப் போட்டியாக காங்கிரஸ் தரப்பும் பாஜக ஆட்சியின்போது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தை கையில் எடுத்து பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நேற்று கபில் சிபல் பேசுகையில், கடந்த 1999ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரே கட்டணத்திலான உரிமம் என்பதிலிருந்து வருவாய் பங்கு அடிப்படையிலான முறைக்கு ஒதுக்கீட்டை மாற்றியதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட உண்மையான இழப்பு ரூ. 1.43 லட்சம் கோடியாகும்.
ஏலத்தைக் கைவிட்டு விட்டு, வருவாய் பங்கு அடிப்படைக்கு மாறியதாலும், உரிம காலத்தை 10 ஆண்டுகள் என்பதிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தியதாலும் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
நம்மிடம் போதிய ஸ்பெக்ட்ரம் உள்ளது. ஆனால் அதை எப்படி, யாரிடம் கொடுப்பது என்பதுதான் முக்கியமானது. அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அது இருக்க வேண்டும் என்றார் சிபல்.