புலிகள் மீதான தடை நீங்கும்! - வைகோ நம்பிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கை விசாரிப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பாயம் ஒன்றை நியமித்திருந்தது.
அதில் நடைபெற்ற விசாரணையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். ஆனால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் என்று இந்த தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் வைகோ, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று நேரில் ஆஜராகி, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். தலைமை நீதிபதி கூறுகையில், முக்கியமான வழக்குகளை விசாரிக்க வேண்டியிருப்பதால், ஆகஸ்ட் மாதம் முறையிடலாம் என்று தெரிவித்தார்.
பின்னர் உயர்நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி நாங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்காக உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பது, எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியாகும்.
இந்த தடையை நீக்கக்கோரி தொடர்ந்து முயற்சி செய்வோம். தடை நீக்கப்படும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், போர்க் குற்றங்களுக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச அளவில் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
தேர்தல் முடிவு வெளியான உடனேயே, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஏற்கெனவே நாங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்," என்றார்.