திமுக கூட்டணியை காங்கிரஸ் உதற வேண்டும்: இளங்கோவன்
நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியின் தொடக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது இருந்த குறைகளை ஜெயலலிதா போக்கிக் கொள்வார் என நம்புகிறேன்.
ப. சிதம்பரம் வெற்றி குறித்து, ஜெயலலிதா கூறிய புகாருக்கு நான் கருத்து கூற முடியாது. ஏனென்றால் அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் உடனடியாக விலக வேண்டும் என்றே பெரும்பான்மையான தொண்டர்கள் நினைக்கின்றனர்.
வேறு கட்சிகளுடன் கூட்டணி என்று கட்சி மேலிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் எந்த முடிவையும் ஏற்போம்.
திமுகவிலிருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலே காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும். விஜயகாந்த் ஆக்கபூர்வமான எதிர்க் கட்சித் தலைவராக செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப விஜயகாந்த் செயல்பட வேண்டும்.
2ஜி வழக்கில் சிபிஐ இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளது. விரைவில் 3வது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளது. விரைவில் அந்த வழக்கு முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில் குற்றவாளிகள் சேர்த்துள்ள கள்ளச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத நிலையில், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக புதிய தலைமைச் செயகலத்தின் திறப்பு விழா நடைபெற்றது. பிரதமர் அதைத் திறந்தபோதே திரைப்பட பாணியில் அங்கு அரங்கு அமைத்ததே அதற்குச் சான்று. இப்போதைய சூழலில் தலைமைச் செயலகம் நடத்த அந்த கட்டடம் உதவாது. அந்த விஷயத்தில் திரும்பத் திரும்ப முதல்வர் ஜெயலலிதா மீது கருணாநிதி புகார் கூறுவது, குழந்தைத்தனமாக உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும். கட்சி மேலிடம் யாரை நியமித்தாலும் நாங்கள் ஏற்போம். கடந்த 2 மாதங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எடுத்த நடவடிக்கைகளுக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அவர் நீக்கியதாக அறிவித்த, நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பதவியில் தொடரலாம்.
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. கல்வியாளர்களுடன் ஆலோசித்து சமச்சீர் கல்வியை அவர் நடைமுறைப்படுத்துவார் என நம்புகிறேன் என்றார் இளங்கோவன்.