ஓரினச் சேர்க்கையை நோய் என்று கூறிய குலாம் நபி ஆசாத்துக்கு கண்டனம்
டெல்லி: ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது. அது ஒரு நோய் என்று கூறிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த ஜில்லா பரிஷத் தலைவர்கள் மற்றும் மாநகர மேயர்கள் மாநாட்டில் பேசிய குலாம் நபி ஆசாத், ஓரினச்சேர்க்க என்பது இயற்கைக்குப் புறம்பானது, அது ஒரு நோய் என்று கூறியிருந்தார்.
இந்த நோய்க்கு எதிராக இந்திய சமூகம் போரிட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இந்த நோய் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைப்பதை அனுமதிக்கக் கூடாது. இப்படிப்பட்டவர்களால் இந்தியாவில் சமூக கட்டமைப்பு சீரழிந்து போய் விடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு குலாம் நபி ஆசாத்தின் துறையின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல லெஸ்பியன், கே, பைசெக்ஸுவல் மற்றும் அரவாணிகள் சமூக அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் பைசா கூறுகையில், இது மிகவும் மோசமான, தவறான கருத்தாகும். அதிலும் சுகாதாரத் துறை அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
பழங்காலக் கருத்தை இப்போது கூறியுள்ளார் ஆசாத். நமது நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது. கலாச்சார ரீதியாகவும் சிறப்பாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆசாத்தின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றார்.
ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் கூறுகையில், முறையான பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் கூடிய ஓரினச்சேர்க்கை என்பது ஆரோக்கியமானதே. எந்தவிதமான செக்ஸ் நடவடிக்கையையும், பாதுகாப்புடன் செய்தால் ஆபத்தில்லாததுதான். அதேசமயம், இயற்கையான செக்ஸ் உறவை மேற்கொள்ளும்போதுதான் எய்ட்ஸ், எச்ஐவி பாதிப்பு அதிகம் என்பதை ஆசாத் மறந்து விட்டார். பாதுகாப்புடன் எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அதில் ஆபத்தில்லை என்பது ஆசாத்துக்குப் புரியாதது வியப்பாக இருக்கிறது என்றார்.